Tamilnadu

நடத்தப்படாத தேர்வுக்கு கட்டணம் செலுத்தாதவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு - அண்ணா பல்கலை. அராஜகம்!

நடத்தப்படாத தேர்வுக்கு தேர்வு கட்டணம் செலுத்தாததை காரணம் காட்டி அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்புகளின் மூலம் படிக்கும் நிலையில், மாணவர்களிடம் கல்விக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம்.

அண்ணா பல்கலைக்கழகம் கல்விக் கட்டணம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்லூரி மேம்பாட்டுக்கான கட்டணம், நூலக கட்டணம், கணினி மற்றும் இதர ஆய்வுக் கூடக் கட்டணம், மருத்துவ உபகரணங்களுக்கான கட்டணம், இன்டர்நெட், விளையாட்டு என ஊரடங்கில் கல்லூரிக்கே செல்லாத மாணவர்களிடம் பல்வேறு வழிகளில் அவசியமற்ற கட்டணங்களை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

கல்லூரிக்கே செல்லாதபோது எதற்காக இந்தக் கட்டணத்தையெல்லாம் செலுத்தவேண்டும் என பல்கலைக்கழக தரப்பிடம் மாணவர்கள் கேள்வி எழுப்பியும் இதுவரை தகுந்த பதில் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இறுதியாண்டு தவிர்த்த மற்ற மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், நடத்தப்படாத தேர்வுக்கு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. பதிவு எண்ணை உள்ளீடு செய்தால் தேர்வு கட்டணம் கட்டாததற்கான குறியீடே காட்டப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவை தெரிந்துகொள்ள முடியாமல் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாமல் மாணவர்கள் பலர் அவதிப்பட்டு வரும் நிலையில், நடத்தப்படாத தேர்வுக்கு தேர்வு கட்டணம் செலுத்தாததை காரணம் காட்டி தேர்வு முடிவை நிறுத்தி வைப்பதற்கு மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read: “ஊரடங்கு காலத்தில் இந்த கட்டணங்கள் எதற்கு?” - மாணவர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடும் அண்ணா பல்கலைக்கழகம்!