Tamilnadu

நீலகிரிக்கு கனமழை.. சென்னை, வேலூர் உட்பட 6 மாவட்டங்களில் மிதமான மழை.. அடுத்த 2 நாட்களின் வானிலை நிலவரம்!

ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை திருவண்ணாமலை, தருமபுரி , கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி குறைந்த பட்சம் 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 செ.மீட்டர் மழையும், பிறையார் எஸ்டேட் 1 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை...

அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மற்றும் வடக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம் ஒடிசா வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதேபோல, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வரும் ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மற்றும் வடக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் உயர் அலை முன்னறிவிப்பு..

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளைச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை இரவு 11.30 வரை கடல் அலை 1.5 முதல் 2.6 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும்.

Also Read: “குற்றவாளிகள் அரசியலுக்குள் நுழைந்து கொள்கைகளை உருவாக்குவதா?” - சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!