Tamilnadu

உலக யானைகள் தினம்: 10 ஆண்டுகளில் 1,000 யானைகள் பலி - யானைகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

கம்பீரத் தோற்றத்துடன் கூட்டமாக வாழக்கூடிய யானைகள் காடுகளின் பாதுகாவலன் என போற்றப்படுகிறது. நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் தனது வலசு பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி நடந்து சென்று ஒரு பகுதியில் இருக்கும் விதையை மற்ற பகுதிக்கு பரப்புவதில் மிகப்பெரிய பங்கு யானைகளுக்கு உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் தேசிய அளவில் நடந்த யானைகள் கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 27 ஆயிரத்து 212 யானைகள் இருந்தன. அவற்றில் 10% யானைகள் , அதாவது 2, 761 யானைகள் தமிழகத்தில் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

தமிழகத்தில் 4 புலிகள் காப்பகங்கள் ஒன்பது வனக்கோட்டங்கள், 4 வன உயிரின சரணாலயங்களில் யானைகள் பரவலாக வாழ்கின்றன.

யானைகளின் வாழ்விட பரப்பு குறைவது, உணவுப் பற்றாக்குறை, நீர் மாசு, பூச்சிக்கொல்லிகள், சட்டவிரோத மின் வேலிகள், வேட்டை, ரயில் மற்றும் வாகன விபத்துக்கள், விவசாய பயிர்களை காக்க விவசாயிகள் கையாளும் தவறான உத்திகள் போன்றவற்றால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

அதேபோல் காட்டு யானைகள் தாக்கி உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் இதற்கு இணையாக உயர்ந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் காட்டு யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பது குறைந்துள்ளது.

ஆனால், யானைகள் உயிரிழப்பு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கோவை, சத்தியமங்கலம், நீலகிரி,கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் உள்ள வனப்பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் யானைகள் உயிரிழப்பு அடிக்கடி உயிரிழந்த வருகிறது.

இது தொடர்பாக ஆய்வு செய்ய சிறப்பு குழுவை தமிழக அரசு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. ஆனால் அவர்கள் எந்த ஆய்வையும் மேற்கொண்டதாக இதுவரை தெரியவில்லை.

இதனிடையே யானை ஆராய்ச்சியாளர்கள் பலரிடம் திரட்டிய தகவல் படி 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 13 யானைகள் இறந்து உள்ளது.

இவற்றில் 427 ஆண் யானைகள், 575 பெண் யானைகள், அழுகிய நிலையில் உடல் கண்டறியப்பட்டதால் பாலினம் கண்டுபிடிக்க முடியாத யானைகளின் எண்ணிக்கை 16. முதுமை, பிரசவம், வரட்சியால் ஏற்பட்ட உணவு பற்றாக்குறை மற்றும் நோய்களால் 310 யானைகள் இறந்துள்ளன. 37 யானைகள் ஆந்தராக்ஸ்க்கு பலியான வையாகும்.

தற்போதும் தமிழகத்தில் உள்ள காடுகளில் யானைகள் வேகமாக உயிரிழந்து வருவது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் நோய்த் தாக்குதல் காரணத்தைக் கண்டறிந்து தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு காரணிகளை தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள வன உயிரின குழுவினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் , காடுகளின் பாதுகாவலனாக திகழும் யானைகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா இன்று உலக யானைகள் தினமான இன்று இயற்கை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Also Read: “நச்சுத்தன்மை கொண்ட உணவால் கோவை வனப் பகுதியில் யானைகள் தொடர்ந்து பலி” : அதிர்ச்சி தகவல்!