Tamilnadu

“செல்போன் சார்ஜரில் மின்கசிவு - தாய், 2 குழந்தைகள் தீப்பிடித்து பரிதாபமாக பலி” : கரூரில் நடந்த சோகம்!

கரூர் ராயனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி முத்துலட்சுமி இரண்டு குழந்தைகள் ரட்சித், ரட்சித். கணவன் பாலகிருஷ்ணனை விட்டுப் பிரிந்த முத்துலட்சுமி தனியாக குழந்தைகளுடன் வசித்து வந்தார். அந்த பகுதில் உள்ள மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை முத்துலட்சுமி வீட்டில் செல்போன் சார்ஜர் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், அருகே இருந்த சோபாவில் தீ பரவியதாக கூறப்படுகிறது. இதனால் வீடு முழுவதும் புகை சூழ்ந்த நிலையில், உடனடியாக அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முத்துலட்சுமி தீப்பிடித்து எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். பக்கத்து அறையில் இரண்டு குழந்தைகளும் புகையால் மூச்சு திணறிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளனர்.

உடனடியாக இரண்டு குழந்தைகளையும் மீட்ட போலிஸார் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார். ஆனால், செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தான்தோன்றிமலை காவல் நிலையப் போலிஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

கரூரில் வீட்டுக்குள் தாய் மற்றும் இரண்டு மகன்கள் தீப்பிடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.