Tamilnadu

முதுபெரும் சி.ஐ.டி.யூ தலைவர் கே.வைத்தியநாதன் மறைவுக்கு தி.மு.க தலைவர் இரங்கல்!

சி.ஐ.டி.யு-வின் முதுபெரும் தலைவர் தோழர் கே.வைத்தியநாதன் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு இயக்கங்களின் தலைவர்களும், தொழிற்சங்கத்தினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கே.வைத்தியநாதன் மறைவு குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த சி.ஐ.டி.யூ தலைவரான கே.வைத்தியநாதன் அவர்கள் வயது முதிர்வின் காரணமாகத் தனது 97-வது வயதில் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் - முன்னேற்றத்திற்காகவும் தன்னலமற்ற சேவையாற்றிய போராட்டக் குணமிக்க சிறந்த தொழிற்சங்கவாதியைத் தொழிலாளர் வர்க்கம் இழந்திருப்பது பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.