Tamilnadu

இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை - மரணத்தில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் புகார்!

மர்மமான முறையில் இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே ஈரியூர் காட்டுப் பகுதியில் அருஞ்சோலை அம்மன் கோயில் உள்ளது. அந்த கோயிலுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள கொட்டகையின் இரும்புக் கம்பியில் ஒரு இளம் ஜோடி தூக்கிட்ட நிலையில் இருப்பதை அவ்வழியாக ஆடு மேய்க்கச் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக இதுகுறித்து கீழ்குப்பம் காவல் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலிஸார் தூக்கில் தொங்கிய இரண்டு சடலங்களையும் கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் விசாரணையில் இறங்கினர். முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த பெண் நயினார்பாளையம் அருகே உள்ள செம்பாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான கவிதா என்பதும், இறந்த ஆண் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன் பாளையத்தை சேர்ந்த 19 வயதான பாஸ் (எ) குமார் என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் இருவரும் ஆத்தூர் அருகே உள்ள கொட்டாய் அரசு கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். மேலும் இருவரும் காதலித்து வந்ததாகவும் தெரிகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் இருவரும் சந்திக்க முடியாத சூழலில் தொலைபேசியில் தொடர்புகொண்டு இருவரும் பேசி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பேருந்து போக்குவரத்து இல்லாத காரணத்தினால் குமார் வீட்டில் உள்ள இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வேலைக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் தான் கவிதாவும் குமாரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இருப்பினும் இவர்களது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குமாரின் தந்தையும் அவரது சகோதரரும் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் கவிதாவின் சடலத்தை மீட்டபோது அவரின் கழுத்தில் தாலி இருந்ததால் இருவரும் திருமணம் செய்துகொண்டு இறந்து விட்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்தில் போலிஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இருவருக்கும் எத்தனை வருடங்கள் பழக்கம், எப்போது இவர்களுக்கு திருமணம் நடந்தது என்பது குறித்தும் விசாரணை நடைப்பெற்று வருகிறது. இதற்கிடையில் உயிரிழந்த காதல் ஜோடி வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஒருவேளை சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read: பணத்திற்காகத் தந்தையையே கொலை செய்த கொடூர மகன் - முன்னாள் அரசு அதிகாரிக்கு நடந்த சோகம்!