Tamilnadu

“தமிழகம் முழுவதும் ஆக.,10ம் தேதி காய்கறி, பழக்கடைகள் இயங்காது” - வணிகர் சங்க பேரமைப்பு திடீர் அறிவிப்பு!

கோயம்பேடு மார்க்கெட் திறக்கக் கோரி வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி தமிழகத்திலுள்ள காய்கறி , பழக்கடை, பூ மார்கெட் என அனைத்து கடைகளும் முழு அடைப்பு செய்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

திருமழிசையில் செயல்பட்டு வரும் கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையை மீண்டும் கோயம்பேடுக்கே மாற்றக்கோரியதன் மீது நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விக்கிரமராஜா தலைமையில் சென்னை புரசைவாக்கத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளரை சந்தித்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசியதன் விவரம் பின்வருமாறு:-

கோயம்பேடு மார்கெட்டை திறக்கக் கோரி இரண்டு முறை முதலமைச்சரை சந்தித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகையால், உடனடியாக கோயம்பேடு மார்கெட்டை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள காய்கறி மார்க்கெட், பழக்கடை, பூக்கடைகள் ஆகியவை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

அதன் பிறகும் தமிழக அரசு கேயம்பேடு மார்க்கெட்டை திறக்காவிடில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த தொடர் போராட்டம் பற்றி ஆகஸ்ட் 10ம் தேதி அறிவிக்கப்படும்.

திருமழிசையில் மொத்த காய்கறி மார்கெட் மாற்றப்பட்டதால் பல ஆயிரம் டன் காய்கறிகள் விற்கப்படாமல் உள்ளது. இதனால் தினந்தோறும் வியாபாரிகள் நஷ்டத்தையே சந்தித்து வருகிறார்கள். இந்த ஒரு நாள் முழு கடை அடைப்புக்கு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் அதரவு அளிக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

Also Read: கொரோனா நோயுடனான போரில் அதிக மருத்துவர்களை இழந்த தமிழகம்: இன்னுயிர் நீந்தவர்களுக்கு மரியாதை செய்யுமா அரசு?