Tamilnadu

“சமமற்ற ஆன்லைன் வகுப்புகளை உடனடியாகக் கைவிட வேண்டும்” : தமிழக அரசுக்கு மாணவர் சங்கம் வலியுறுத்தல்!

மாணவர்களுக்கு இடையேயான தொழில்நுட்ப இடைவெளியைச் சமன்செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். எனவே சமமற்ற ஆன்லைன் வகுப்புகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தமிழகத்தில் கோவிட்19 நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காலத்தில் தமிழக அரசு யுஜி, பிஜி மாணவர்களின் 2 & 4 ஆம் பருவத்தேர்வுகளை ஆன்லைன், ஆப்லைன் என்ற இரு வழிகளிலும் நடத்த இயலாது என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டு ரத்து செய்ததை இந்திய மாணவர் சங்கம் வரவேற்கிறது.

புறச்சூழலில் எந்த மாற்றமும் முன்னேற்றமும் நிகழாத போது, திடீரென கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் வழியாக வகுப்புகள் தொடங்கும் என்ற அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியத்தையும் ஏற்படுத்துகிறது.

ஓரிரு நாட்களுக்கே, மாணவர்களால் சாத்தியப்படாத இணைய வழிப்பயன்பாடு இப்போது மட்டும் எப்படி சாத்தியம்? என்ற கேள்வி எழுகிறது. நகர்ப்புறங்களில் சுமார் 50 சதவீதமாணவர்களிடமும் கிராமப் பகுதிகளில் சுமார் 70 சதவீத மாணவர்களிடமும் முழுமையான இணைய வழிப் பயன்படுத்தும் திறன் இல்லை என்பது உண்மை.

இணைய வழி பயன்பாடு திறன் என்பது வெறுமனே ஒரு ஆண்ட்ராய்டு ஃபோன், லேப்டாப் வைத்திருப்பது மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. மேலும் அப்படி ஃபோன், லேப்டாப் வைத்திருந்தாலும் தடையற்ற, முழு அளவிலான நெட் ஒர்க், அதிக டேட்டா, டேட்டா ஸ்பீட் என பல அம்சங்களை உள்ளடக்கியது. இவை இல்லாத சரிபாதிக்கும் மேற்பட்ட மாணவர்களின் நிலை என்ன ஆகும்? அரசு இதை உணர்ந்துதான் அரசுப் பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்பு தொடங்கவில்லை.

அதற்குப் பதிலாக டிவி சேனல்கள் போன்ற மாற்று வழிகளை அரசு அமல்படுத்தி வருகிறது. அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், கிராமப்புற சுயநிதிக் கல்லூரிகள் மட்டும் எப்படி ஆன்லைனில் நடத்த முடியும்? திடீரென ஆன்லைன் மூலம் கல்வி என்று சொன்னால் இரண்டு விஷயங்கள் நடக்கும்.

ஒன்று, படிக்க விரும்புகிற மாணவர்கள் இந்த வசதி பெற இயலாத காரணத்தால், கல்வியில் இருந்து வெளியேறும் அவல நிலைக்குத் தள்ளப்படுவர். இரண்டாவதாக, ஏழை மாணவர்களுக்கு இந்த கொடிய சூழலில் மொபைல் ஃபோன் வாங்குவதற்கு குறைந்தது ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை உடனே தேவைப்படும். அதை வாங்கி விட்டாலும் டேட்டா, அகண்ட அலைவரிசை (Broad Band) போதுமான வேகம் ஆகியவை தினசரி தொடர்ந்து தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு இது மாபெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும். மேலும், கந்து வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில்முன் பாய்ந்து மாணவர் பிரதீப் தற்கொலை, அதேபோல் கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் ஒருமாணவர் தூக்குப்போட்டு தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆன்லைன் வகுப்புகள் துவங்கும் முன்பே போன் வாங்க முடியாமல் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் என்றால், துவங்கியபின் ஆன்லைன் கல்வியால் இன்னும் மோசமான நிலையே மாணவர்கள் சந்திக்க நேரிடும். எனவே அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையிலான மாற்று வழிகளைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்துவது போல பல்கலைக்கழக அளவில் இ-கன்டென்ட் உருவாக்கம் செய்து அரசு மாணவர்களுக்கு கொடுத்தது போல் பென்டிரைவ் மூலமாக வழங்கலாம். தேவைப்பட்டால் பார்த்துக் கொள்வதற்கு பல்கலைக்கழக வெப்சைட் மற்றும் கல்லூரி வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யலாம்.

இப்பொழுதுள்ள சூழலில் ஆன்லைன் இல்லாமல் கல்லூரியை நடத்துவது சம்பந்தமாக ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர் அமைப்புகள், மாணவர் அமைப்புகளிடம் ஆலோசனை பெறவேண்டும்.

மாணவர்களுக்கு இடையேயான தொழில்நுட்ப இடைவெளியைச் சமன்செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். அதுவரை, இடைவெளியை அதிகரிக்கின்ற, சமமற்ற ஆன்லைன் வகுப்புகளை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: குழந்தைகளின் கல்விக்காக தாலியை அடகு வைத்து புதிய டி.வி வாங்கிய தாய்: ஆன்லைன் கல்வியால் அரங்கேறும் அவலம்!