Tamilnadu

கணவர் உதவிபுரிய மறுத்ததால் புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை? : ‘Work From Home’ பணியினால் நடந்த விபரீதம்!

ஊட்டியை சேர்ந்த ஹரிகணேஷ் மற்றும் பிரிய தர்ஷினி ஆகிய இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஹரிகணேஷ் அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராகவும், பிரிய தர்ஷினி நுங்கம்பாக்கத்தில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியாற்றிக்கொண்டு விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று பிரியதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தகவலறிந்த கே.கே நகர் போலிஸார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தே பிரியதர்ஷினி பணிப்புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு பிரியதர்ஷினி பணிப்புரியும் போது கணவர் ஹரிகணேஷிடம் பணியின் காரணமாக உதவி கேட்டதாக தெரியவருகிறது. ஹரிகணேஷ் உதவி புரிய மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த பிரியதர்சினி தனி அறைக்கு உறங்க சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை நீண்ட நேரமாகியும் பிரியதர்சினியின் அறை திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த ஹரிகணேஷ் கதவை உடைத்து பார்த்த போது பிரியதர்சினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும், பிரியதர்ஷினி வேலை பளுவின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இவர் மன அழுத்தம் காரணமாக சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வருவதும் போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பிரியதர்ஷினி மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி ஒருவருடத்தில் புதுமணப்பெண் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Also Read: ஆன்-லைனில் படிக்க ஸ்மார்ட்போன் இல்லை: 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை