Tamilnadu

“தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 7 மாவட்டங்களில் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் தாமரை பாகத்தில் 10 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி பந்தலூரில் 9, நீலகிரி தேவாலா, கரூர் பாலவிடுதி தலா 8 சென்டி மீட்டர் மழையும்,கோவை சின்னகல்லாறு புதுக்கோட்டை ஆதனக்கோட்டை தலா 7 செண்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வரும் ஐந்து தினங்களுக்கு மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், அதேபோல் அந்தமான் தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், கடலோர கேரளா கர்நாடகா லட்சத்தீவு மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Also Read: “ஊடகங்கள் மீது வல்லாதிக்கம் செலுத்துவதை பாசிசவாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்” : ஊடக கண்காணிப்புக் குழு!