Tamilnadu

மாரிதாஸ் மீது அடுத்த வழக்கு ? - அரசு மருத்துவர்கள் குறித்து அவதூறு பேசி மாட்டிக் கொண்ட மாரிதாஸ்!

தமிழகத்தில் காலுன்றுவதற்காக பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் பல குறுக்கு வழியை கையில் எடுத்துள்ளது. குறிப்பாக கருத்தியல் ரீதியாக பதில் பேச முடியாத வலதுசாரிகள், பின்பற்றும் ஒரே யுக்தி பொய் செய்தி.

ஒரு பொய்யை பலமுறை கூறினால் உண்மையாக்கி விடலாம் என்பதே அவர்களின் அற்ப அரசியல் கொள்கை. அப்படி திட்டமிட்டு, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்களை வெளியிடுவதிலும், பார்வையாளர்களை தவறான பாதை நோக்கி வழி நடத்துவதிலும் சில மோசடியாளர்களை களம் இறக்கியுள்ளது.

அப்படி திட்டமிட்டு பொய் தகவல்களை பரப்புவதில் முதன்மையான மோசடியாளர் மாரிதாஸ். இந்த மாரிதாஸ் என்பவர் சமீபத்தில் கூட பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மீதும், பா.ஜ.க மற்றும் வலதுசாரி அமைப்புகளை எதிர்த்து கேள்வி கேட்கும் ஊடகவியலாளார்களை அவதூறாக சித்தரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றமும் மாரிதாஸ் வெளியிடும் அவதூறு வீடியோக்களை நீக்கவும், பொய் தகவலோடு வீடியோ வெளியிடக்கூடாது என எச்சரித்துள்ளது. ஆனாலும் மாரிதாஸ் தனது போக்கை நிறுத்திக்கொள்ளவில்லை.

தமிழகத்தை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றை எதிர்த்து அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பற்றி பல அவதூறுகளை நேற்றை தினம் வெளியிட்டுள்ள வீடியோவில் மாரிதாஸ் பேசியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதாகவும், ஆளும் அரசுகளை அச்சுறுத்தி சம்பள உயர்வு பெறுவதாகவும் அடுக்கடுக்கான பொய் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்தியாவில் அனைத்தும் தனியார்மயமாக வேண்டும் கோஷம் போடும் வலதுசாரி கும்பல்களின் அஜண்டாவை தற்போது மாரிதாஸ் தூக்கிப்பிடிக்கத் துவங்கியுள்ளார். அதன் வெளிப்பாடாகவே அரசு ஊழியர்கள் மீது மாரிதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார் எனத் தெரிகிறது.

இந்நிலையில், அரசு மருத்துவர்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைக்கு யு டியூப் வாயிலாக மாரிதாஸ் என்பவர் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை மோசமான முறையில் மற்றும் தரக்குறைவான வார்த்தையில் விமர்சித்துள்ளார்.

இம்மாதிரியான பேச்சுக்களை புறம் தள்ளி மக்கள் நலம் காக்க எங்கள் பணி தொடர்ந்தாலும் இத்தவறான பேச்சு அனைவரின் மத்தியில் வருத்தத்தையும் மக்களின் மனதில் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. கோவிட் ஒழிப்பு பணியில் ஓய்வின்றி பணியாற்றும் 18000 மருத்துவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சார்பாக அரசு டாக்டர்கள் சங்கம் அவரின் பேச்சுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் சுய விளம்பரத்திற்காக இவ்வாறு அவதூறாகத் தவறாகப் பேசிய மாரிதாஸ் என்பவர் மீது காவல்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தி.மு.க பற்றி அவதூறான தகவல்களைப் பரப்பும் மதன் ரவிச்சந்திரன் மீது வழக்கு - உதயநிதி ஸ்டாலின் அதிரடி!