Tamilnadu
ஊரடங்கில் அரசு பள்ளி மாணவிகளுக்கு நாப்கின், முட்டை வழங்குவது குறித்து ஏன் பரிசீலிக்க கூடாது? - ஐகோர்ட்
கொரோனா தொற்று அச்சத்தால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், சத்துணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கிவந்த முட்டைகளை தொடர்ந்து வழங்குவது குறித்தும், மாணவிகளுக்கு நாப்கின் தொடர்ந்து வழங்குவது குறித்தும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு இலவச முட்டைகள் வழங்கவும், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்கக்கோரியும் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சத்துணவுக் கூடங்கள் மூடப்பட்டுள்ள போதிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம், குழந்தைகள், வளர் இளம் பெண் குழந்தைகள், கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அரசி, பருப்பு, சத்துமாவு, முட்டை ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று வழங்கி வருவதாகவும், இதன் மூலம் இந்த ஊரடங்கு காலகட்டத்திலும் 33 லட்சத்து 12 ஆயிரத்து 629 பேர் பயனடைந்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சத்துணவுத் திட்டத்தின் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 42 லட்சத்து 61 ஆயிரத்து 124 மாணவ மாணவியருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
அதேநேரத்தில், கொரானா தொற்று பரவி வருவதால் மாணவர்களை தினமும் பள்ளிகளுக்கு அழைத்து இலவச முட்டைகள் வழங்குவது பாதுகாப்பாக இருக்காது எனவும் தமிழக அரசு தெரிவித்தது. இதைக் கேட்ட நீதிபதிகள், கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு அரசு ஆசிரியர்கள் பணியின்றி வீட்டில் இருக்கும் இந்த சூழலில், அவர்கள் மூலமாக பள்ளி குழந்தைகளுக்கு முட்டை வழங்குவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர்.
தினமும் இல்லாவிட்டாலும் வாரத்தில் ஒரு நாள் அடிப்படையில் கூட மொத்தமாக முட்டைகளை விநியோகிக்கலாம் எனவும் யோசனை தெரிவித்த நீதிபதிகள், அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நாப்கின்களை தொடர்ந்து வழங்குவது தொடர்பாகவும், இவற்றை விநியோகிப்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Also Read
-
”மோடி தொடர்ந்து பேச பேச பாஜக படுதோல்வி அடைவது உறுதி” : செல்வப்பெருந்தகை!
-
பாலியல் புகார் : பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா கட்சியிலிருந்து இடைநீக்கம்!
-
”போலி வீடியோக்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற கட்சி பா.ஜ.க” : மல்லிகார்ஜூன கார்கே பதிலடி!
-
தேர்தல் அதிகாரியை தாக்கிய பா.ஜ.க தலைவர் : திரிபுராவில் அராஜகம்!
-
மணிப்பூர் - பெண்கள் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட விவகாரம் :CBI குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!