Tamilnadu

“மருத்துவமனையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்” - சீமான் மீது தொடர்ந்து குற்றஞ்சாட்டும் விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் ஹரிநாடார் ஆகியோரால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை விஜயலட்சுமி இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த விஜயலட்சுமியை மருத்துவமனை நிர்வாகம் யாருடைய நிர்பந்தத்தின் பேரிலோ வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கிறது. இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி இந்த விவகாரத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை விஜயலட்சுமி, கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குநருமான சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். குறிப்பாக தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக குற்றஞ்சாட்டி இருந்தார். மேலும் சீமான் தன்னுடன் இருந்ததாகக் கூறி சில புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

இதன் காரணமாக சீமானின் ஆதரவாளர்கள் இவரை கடுமையாக விமர்சித்து வந்தனர். இருப்பினும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீமான் மீது விமர்சனங்களை முன்வைத்து தனது ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவிடுவதும், நேரலையில் பேசுவதுமாக இருந்தார் விஜயலட்சுமி.

இந்நிலையில் விஜயலட்சுமி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுத்தப்படும் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார். தற்கொலை முயற்சிக்கு முன்பாக அவர் வெளியிட்டிருந்த வீடியோ சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த விஜயலட்சுமி, அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அங்கிருந்து அவரை யாருடைய நிர்பந்தத்தின் பெயரிலோ வலுக்கட்டாயமாக போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மற்றப்பட்டதாக தற்போது நடிகை விஜயலட்சுமி குற்றம் சாட்டியிருக்கிறது.

போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. தன் உடல்நிலை மோசமடைந்தது குறித்து ஊடங்களுக்கு அவர் தகவல் தெரிவித்திருக்கிறார். அதனால், அந்த மருத்துவமனையில் இருந்தும் அவரை வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாக வெளியே வந்த விஜயலட்சுமி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

உடல்நிலை இன்னும் சரியாகாத நிலையில், யாருடைய அறிவுறுத்தலின் பேரில் தன்னை அந்த மருத்துவமனை நிர்வாகம் வெளியே அனுப்பியது என்றும், தன் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரும் பட்சத்தில் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், “நான் நிம்மதியாகவே வாழ விரும்புகிறேன். ஆனால் என்னை நிம்மதியாக இருக்க விடாமல் தொடர்ந்து கொச்சையான வார்த்தைகளை கூறி சீமான் - ஹரிநாடார் உள்ளிட்டவர்கள் எனக்கு மனவுளைச்சலை ஏற்படுத்துகின்றனர்.

அடையார் மருத்துவமனையில் இருந்தபோது மேஜிஸ்திரேட் என்னிடம் வாக்குமூலம் பெற்றுச் சென்றார். அவரிடம் நடந்த விஷயங்களை கூறியிருந்தேன். ஆனால், இதுவரை சீமான் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் என்னை ஒரு மருத்துவமனையை விட்டு இன்னொரு மருத்துவமனைக்கு மாற்றியதோடு, எங்கேயும் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாதபடி சிலர் அழுத்தம் கொடுக்கின்றனர்” என ஆதங்கத்துடன் பேட்டி கொடுத்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விஜயலட்சுமி வைக்கும் குற்றச்சாட்டுகள் எதற்கும் சீமான் ஏன் இதுவரைக்கும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என அவரது கட்சியினரே இப்போது கேள்வியெழுப்ப தொடங்கியுள்ளனர்.

Also Read: நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி... சீமானும், ஹரி நாடாரும் அவமானப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு!