Tamilnadu

நல வாரியங்களில் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கும் நிவாரணம் கோரி வழக்கு : நிதி நெருக்கடி என மழுப்பும் அரசு!

நல வாரியங்களில் பதிவு செய்யப்படாத பிற தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி வழங்கக் கோரி கட்டுமான தொழிலாளர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கொரோனா ஊரடங்கு சூழலில் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை, நலவாரியத்தில் பதிவு செய்யப்படாத தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால், பதிவை புதுப்பிக்காதவர்களுக்கும், பதிவு செய்யாதவர்களுக்கும் நிவாரண உதவியாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் 1,000 ரூபாய், மே மாதத்தில் 1,000 ரூபாய் என 2,000 வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுதவிர சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக ஜூன் மாதத்தில் 1,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

12.13 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ள கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் இருந்த ரூபாய் 3,200 கோடி நிதியிலிருந்து 343 கோடி ரூபாய் கொரோனா காலத்தில் நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பதிவு செய்யப்படாத தொழிலாளர்களுக்கும் நிதியுதவி வழங்குவதாக இருந்தால், அது தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

கட்டுமானத் துறையில் 50 லட்சம் பேர் இதர துறைகளில் ஒரு கோடி பேர் என மொத்தம் ஒன்றரை கோடி பேர் பதிவு செய்யப்படாத தொழிலாளர்களாக இருப்பார்கள் என அரசு கருதுவதாக தெரிவித்த அவர், இதுவரை பதிவு செய்து கொள்ளாத தொழிலாளர்கள் இன்றே கூட ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் எனவும், அப்படி விண்ணப்பிக்கும் பட்சத்தில் அடுத்த மாதத்திலிருந்து அரசு வழங்கும் நிவாரண உதவிகள் அவர்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

ஒரு குறிப்பிட்ட நலவாரியத்தைச் சேர்ந்த பதிவு செய்யப்படாத தொழிலாளர்களுக்கு மட்டும் அரசு நிவாரண உதவி வழங்கும் பட்சத்தில், தமிழகத்தில் உள்ள பிற நலவாரியத்தை சேர்ந்தவர்களும் இதே கோரிக்கையோடு வழக்கு தொடரப்படும் என எடுத்துரைத்தார்.

ஏராளமான நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு செலவு செய்து வரும் இந்த எதிர்பாரா சூழலில், அரசுக்கும் கடுமையான நிதி நெருக்கடி இருப்பதாகவும் தெரிவித்தார். வழக்கின் வாதம் நிறைவடையாததால், வழக்கு விசாரணை தொடர்ந்து நாளை மறுதினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Also Read: OBC இடஒதுக்கீடு எத்தனை %?: 3 மாதங்களில் அறிவிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு- 170 பக்க தீர்ப்பின் சாராம்சம்!