Tamilnadu

“இலவச முட்டை வழங்குவது கொள்கை முடிவு” : அதிமுக அரசு பதில் - மக்கள் நலன் காக்கும் லட்சணம் இதுதானா?

கொரோனா தொற்று பாதிக்காமல் தடுக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுதும் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச முட்டைகள் வழங்கவும், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள 43 ஆயிரத்து 246 சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சமூக நலத்துறை செயலாளர் மதுமதி சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. கொரோனா பேரிடர் சமயத்தில் தினமும் மாணவர்களையோ, பெற்றோர்களை வரவழைத்து முட்டை வழங்குவது பாதுகாப்பானது அல்ல என்பதால் ரேஷன் கடைகள் மூலம் வழக்கமான அளவை விட கூடுதல் பருப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்துணவு கூடங்கள் மூடப்பட்டுள்ள போதிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம், குழந்தைகள், வளர் இளம் பெண் குழந்தைகள் கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அரசி, பருப்பு, சத்துமாவு, முட்டை ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கி வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்துணவுத் திட்டத்தின் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ மாணவியருக்கு மே மாதத்திற்கான சத்துணவு பொருட்களாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல வழக்கு விசாரணையின் போது அம்மா உணவகங்களில் முட்டை வழங்குவது அரசின் கொள்கை முடிவு எனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Also Read: “கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவது குறித்த பதிவேடு பராமரிக்கப்படுகிறதா?" - ஐகோர்ட் கேள்வி!