Tamilnadu

நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ரத்து.. ஆனால் அரியர்ஸ் தேர்வுகள்? செக் மேட் வைத்த உயர் கல்வித்துறை! 

கல்லூரி பருவத் தேர்வுகள் ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப பட்டைய படிப்பு பயில்வோருக்கு தற்போதுள்ள சூழலில் பருவத் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக உயர்மட்டக் குழு பரிந்துரைத்துள்ளதாக அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுக்களின் வழிகாட்டுதலின்படி, முதல், இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பு பயில்வோர், பலவகை தொழில்நுட்பப் பட்டப்படிப்பு பயில்வோ, முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் நடப்பாண்டு பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன.

அதேபோல, இளநிலை பொறியியலில் முதல் மூன்று ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், முதுகலை பொறியியலில் முதலாமாண்டு, எம்.சி.ஏ. முதல் மற்றும் இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களுக்கும் நடப்பு பருவத் தேர்வில் இருந்து விலக்களித்து அடுத்த கல்வியாண்டுச்செல்ல அனுமதியளித்துள்ளது.

அதேச் சமயத்தில், இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் கடைசி செமஸ்டர் தேர்வு ரத்து குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மத்திய அரசிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தேர்வுகள் ரத்து என்ற அறிவிப்பை அறிந்த மாணவர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். மேலும் மீம்ஸ்களும் வைரலாகி வருகின்றன. அதேவேளையில் இறுதியாண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுமா ரத்தாகிறதா என ஏதும் அறிவிக்கப்படாதால் மாணவர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கிடையே, முதல் மூன்று ஆண்டு மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியானாலும் அந்த முதல் மூன்று ஆண்டு மாணவர்களின் அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. ஆனால், நடப்பு பருவத்தேர்வு மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது அரியர் தேர்வுகள் கல்லூரி திறக்கும் போது நடத்தப்படும் என உயர் கல்வித்துறை தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

Also Read: “இந்தியாவில் சமூக பரவலே இல்லையா? இது மெகா மோசடி” - மோடி அரசை சாடும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்! #Corona