Tamilnadu

வாகனத்தை பறிமுதல் செய்ததால் தீக்குளித்த ஆம்பூர் இளைஞர் - 5 போலிஸார் பணியிட மாற்றம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே போலிஸார் வாகனத்தை பறிமுதல் செய்ததால், இளைஞர் தீ குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூரில் கூலி வேலை செய்யும் முகிலன் என்ற இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தில், தனது வீட்டில் இருந்து புறப்பட்டிருக்கிறார். தனது வீட்டுக்கு அருகிலேயே காவல் துறையினர் வாகனங்களை மடக்கி விசாரித்து வந்தனர். அப்போது முகிலனையும் விசாரித்தனர். முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், அதை மீறியதாக, போலிஸார் முகிலனின் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனால் முகிலன் போலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின், வாகனத்தை கொடுக்காவிட்டால் தீ குளித்து விடுவேன் என எச்சரித்துள்ளார். அப்போதும் போலிஸார் கண்டு கொள்ளாததால், தனது வாகனத்தில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளித்துள்ளார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், போர்வையைக் கொண்டு தீயை அணைத்து, ஆம்புலன்ஸில் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்காக போராடி வருகின்றார்.

தீக்குளிக்கும் அளவுக்கு போலிஸார் முகிலனிடம் என்ன பேசினார்கள் என்ற தகவல் இன்னும் வெளியில் தெரியவில்லை. இதனிடையே, வாகனத்தை பறிமுதல் செய்த 5 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.