Tamilnadu

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்குவதில் என்ன சிரமம்? - எடப்பாடி அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

தமிழகத்தில் தவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய இடம், உணவு உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்றமும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உரிய வசதிகள் செய்து நிவாரணம்வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவுகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை என்று கூறி வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரிக்கப்பட்டது. அப்போது மனுதாரர், தமிழக அரசு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க உத்தரவிட்டுள்ளது. அதேபோல ரேஷன் கார்டு இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு திரும்பிய தொழிலாளர்களுக்கும் வழங்கவேண்டும் என்று உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

மேற்கு வங்க அரசு ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரேஷன் பொருட்களை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தைப் பொறுத்த அளவு விவசாயத் தொழிலுக்கு கூட வெளிமாநில தொழிலாளர்களை நம்பித்தான் இருக்கவேண்டிய சூழல் இருப்பதாக தெரிவித்தனர். வெளிமாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தமிழகம் பிழைக்காது என்ற சூழ்நிலை உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

பல நிறுவனங்கள் வெளிமாநில தொழிலாளர்களை நம்பியே செயல்படுவதாகவும், அவர்கள் இல்லாததால் தற்போது கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து ரேஷன் கார்டு இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள், மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பிய தொழிலாளர்களுக்கு, ரேஷன் பொருட்கள் வழங்க முடியுமா என்பது குறித்து தமிழக அரசு வருகிற திங்கட்கிழமை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: “காற்றின் மூலமும் கொரோனா பரவுகிறது” - WHO வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!