Tamilnadu

அடங்காத போலிஸ், அடக்கிய உயர்நீதிமன்றம் - வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம்!

சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. காவல் நிலையை பொறுப்பாளராக வட்டாட்சியர் செந்தூர் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் போலிஸால் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மாவட்ட நீதிபதி நேற்று விசாரணை நடத்தினார். விசாரணையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் D.குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் C.பிரதாபன் ஆஜராகினர். அப்போது முறையான ஆவணங்களை சமர்ப்பிக்காமலும், விசாரணைக்கு ஒத்துழைக்காமலும் நடந்து கொண்டனர்.

மேலும், உடனிருந்த காவலர் மகாராஜன், நீதிபதியிடம் " உன்னால ஒன்னும் **** முடியாதுடா" என்று தரக்குறைவாக பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மாவட்ட நீதிபதியை மதிக்காத காவல் துறையின் ஆணவம் வன்மையாக கண்டிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் D.குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் C.பிரதாபன் ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். காவல்ர் மகாராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், விசாரணைக்கு ஒத்துழைக்காமலும், ஆதாராங்கள், ஆவணங்களை சமர்ப்பிக்காததாலும், போலிஸ் மீது நம்பிக்கை இழந்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உத்தரவிட்டுள்ளது.

வருவாய் ஆட்சியர் செந்தூர் ராஜ், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல்நிலையத்தில் இருந்து சேகரிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகொலைகள் செய்த காவல் துறை, தற்போது சட்டத்தையும் நீதிபதியையும் வெளிப்படையாகவே அவமதிப்பது, காவல் துறையின் அதிகார ஆணவத்தையே காட்டுகிறது.