Tamilnadu

மக்களுக்காக உழைக்கும் சு.வெங்கடேசனை மிரட்டும் அமைச்சர் பொய்த்தகவல் பரப்பிய ஜீயர் மீது நடவடிக்கை எடுப்பரா?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. நேற்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமே இன்று 1,992 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் மட்டுமே மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53,762 ஆக உயர்ந்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக இன்று மதுரை மாவட்டத்தில் 284 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற தொகுதியின் மக்கள் பிரதிநிதி என்ற முறையில், எம்.பி சு.வெங்கடேசன் நோய்த்தொற்றை தடுக்கவும், சோதனையை அதிகரிக்கவும் உரிய சிகிச்சையளிக்கவும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் பொதுசுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார். எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் நோய்த்தொற்று பரவல் அதிகமாகி வருகிறது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் தொற்று பரவும் வேகமானது 7.9 சதவீதமாக இருக்கிறது என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. அதனை சுட்டிக்காட்டி, இதே நிலைநீடித்தால் ஜூலை 21-ஆம் தேதி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,883 ஆக இருக்கும் என்பதையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இவர்களை கண்டறிந்து சிகிச்சையளிக்க இனிவரும் நாட்களில் குறைந்தபட்சம் தினம்தோறும் 9,500 பேரை சோதனை செய்தாக வேண்டுமென்றும், இவர்களுக்கு சிகிச்சையளிக்க தற்போதுள்ள மருத்துவமனை மற்றும் கொரோனா நலவாழ்வு மையங்களையும் சேர்த்து 5,000 படுக்கைகளாவது ஏற்படுத்த வேண்டும் எனவும் சு.வெங்கடேசன் எம்.பி., தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து மதுரையில் கொரோனா தடுப்பு பணிகளில் எதுவும் நடக்கவில்லையென்றும், மதுரை மருத்துவக்கல்லூரியில் கொரோனா பரிசோதனைக் கருவிகளை இரட்டிப்பாக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதற்கு அரசு தரப்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, முதல்வருக்கு கடிதம் எழுதிய எம்.பி., வெங்கடேசன் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மிரட்டியுள்ளார்.

தனது தொகுதி மக்களின் நலன்களைக்கருதி முதல்வருக்கு கடிதம் எழுதிய மக்கள் பிரதிநிதியை மிரட்டும் அமைச்சருக்கு ஜனநாய அமைப்பினர் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சியினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, “108 முறை ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை மக்கள் வீட்டிலிருந்து ஜெபம் செய்தால் மருந்து, மாத்திரைகள் தேவையில்லை. கரோனா தானாக ஓடிவிடும் , 108 முறை ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை மக்கள் வீட்டிலிருந்து ஜெபம் செய்தால் மருந்து, மாத்திரைகள் தேவையில்லை. கொரோனா தானாக ஓடிவிடும்” என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறியவியலுக்கு புறம்பாக பேசியுள்ளார்.

மக்களுக்காக முதல்வருக்கு கடிதம் எழுதிய சு. வெங்கடேசன் மக்களிடம் பீதியை ஏற்படுத்துவதாக சொல்லி வழக்குப் பதிவு செய்வதாக மிரட்டிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மக்களிடையே பொய்யான தகவலை பரப்பிய ஜீயர் மீது நடவடிக்கை எடுப்பாரா? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

Also Read: “இந்த அரசிடமிருந்து நமக்கு நீதி கிடைக்கப்போகிறதா?” - முதல்வர்,அமைச்சரின் பேச்சால் கனிமொழி எம்.பி காட்டம்!