Tamilnadu

“வடமாநிலப் பெண்களை வைத்து பாலியல் தொழில்” : தஞ்சையில் சிக்கிய கும்பலால் கதிகலங்கும் முக்கியப் புள்ளிகள்!

தஞ்சை மாவட்டத்தில் வட மாநிலப் பெண் பாலியல் வன்புணர்வு விவகாரத்தில் சிக்கிய 5 பேர் கொண்ட கும்பல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளாக, 8 வீடுகளை வாடகைக்கு எடுத்து கோடிக்கணக்கான ரூபாய் பேரத்தில் ஈடுபட்டு பாலியல் தொழில் செய்து வந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ள செங்கிப்பட்டியில், ஜுன் 1 ம் தேதி, 20 வயது மதிக்கத்தக்க வடமாநில இளம்பெண் ஒருவரை, சிலர் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டுச் சென்றனர். இதைக் கவனித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ரத்தக் காயங்களுடன் இருந்த அந்தப் பெண்ணை மீட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து, அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலிலும் ஈடுபட வைத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதுதொடர்பாக மாதர் சங்கத்தினர் கொடுத்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

ராஜம்

அப்போது பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் தலைமறைவாகியுள்ளனர். இதனையடுத்து தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன், எஸ்.பி மகேஷ்வரன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட காவல்துறையினர், தலைமறைவாக இருந்த, மேலவஸ்தா சாவடியை சேர்ந்த செந்தில் குமார், அவரது மனைவி ராஜம், லஞ்ச வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன், ராமச்சந்திரன், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி உள்ளிட்ட 5 பேரையும் கடந்த 4 ம் தேதி இரவு கைது செய்து செய்தனர். அத்துடன் அவர்களிடமிருந்து 4 கார்கள், 3 டூவீலர்கள், 4 செல்போன், ஒரு டைரி உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனிடையே கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், தஞ்சையில், உரிமையாளர்கள் அருகில் இல்லாத வீடாகப் பார்த்து 8 வீடுகளை ஒத்தி மற்றும் வாடகைக்கு எடுத்து, செந்தில்குமார், ராஜம் ஆகியோர் கடந்த 10 ஆண்டாக, பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளனர். இதற்கு மூளையாக, இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் செயல்பட்டதுடன், காவல்துறை பிரச்சனை எதுவும் வராமல் பார்த்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக பைனான்ஸ் மற்றும் டிராவல்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். ராஜத்திடம் சுமார் ஆயிரம் வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்கள் உள்ளன. இதில், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் தொடர் வாடிக்கையாளர்களாக இருந்தது தெரியவந்துள்ளது.

வடமாநிலப் பெண்களை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தியுள்ளனர். பிரச்சனை எதுவும் வாரது என்பதற்காக இந்த முறையை கையாண்டுள்ளனர். இதற்காக வடமாநிலத்தில் பல புரோக்கர்களையும் வைத்துள்ளனர். இவர்களிடம் தொடர்பிலிருந்த பலர் காவல்துறையினர் எனவும், தற்போது ஓய்வு பெற்றுச் சென்று விட்டாலும் அவர்களும் தேவையான உதவிகளை செய்து கொடுத்து வருவதும் தெரியவந்துள்ளது.

இதனால்தான் பெரிய அளவில் இதுவரை சிக்காமல் பாலியல் தொழிலில் தனி சாம்ராஜ்யமே நடத்தி வந்துள்ளனர். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் சம்பாதித்துள்ளனர். மேலவஸ்தா சாவடியில் உள்ள வீடு மட்டும் மூன்றரை கோடி மதிப்பு கொண்டது எனவும் தெரியவந்துள்ளது. விபரம் தெரிய வந்தநிலையில், வீடு, கார்களை வாடகை கொடுத்தவர்கள் மிகவும் கலக்கத்தில் உள்ளனர்.

Also Read: பொதுத்தேர்வு நடத்த அடம்பிடிக்கும் அரசு: தனியார் பள்ளிகளின் 11ம் வகுப்பு கட்டணக் கொள்ளைக்குத் துணைபோகிறதா?