Tamilnadu

“தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கும் குழந்தை திருமணம்” : தேனியில் மட்டும் 49 திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழலில் குடும்ப வன்முறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக சமீபத்தில் தேசிய மகளிர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது. இந்தசமயத்தில் வறுமையின் காரணமாக குழந்தைகள் திருமணமும் தமிழகத்தில் அதிகரித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அப்படி கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் மே 30 தேதி வரை கொரோனா காரனமாக ஊரடங்கு அமுலில் இருந்த சமயத்தில் 49 குழந்தை திருமணங்கள் கடைசி நேரத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தபட்டு உள்ளது.

இதுதொடர்பாக சைல்ட் லைன் அமைப்பினர் கூறுகையில், “தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, வறுமை, போதிய கல்வி அறிவில்லாமை, பெண் குழந்தைகளை குடும்ப சுமையாக கருதுவது, இடம் பெயர்ந்து வாழும் நிலை, சமூகத்தில் பெண்ணை அடிமைப்படுத்துவது,

வரதட்சணைக் கொடுமை, குறைந்து வரும் பாலின சதவீதம், பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க, விழிப்புணர்வு இல்லாதது, சிறுமிகள், இளைஞர்களிடையே ஏற்படும் இனக்கவர்ச்சி பற்றிய புரிதல் இல்லாமை உள்ளிட்டவையாகும். பொதுவாக இவையே குழந்தைகள் திருமணங்கள் நடக்க முக்கிய காரனமாக கருதப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், பெற்றோர்களுக்கு தெரியாமல் குழந்தைகள் திருமணங்கள் செய்யும் பட்சத்தில் அந்த குழந்தையை பெற்றோர்கள் ஆதரவு கரம் நீட்ட மாட்டார்கள் என்றும் அத்தைய சூழலில் குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் பட்சத்தில் அவருக்கு பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாகவும், அவர்களுக்கு தொழில் கல்வி கற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர் குழந்தைகள் நல ஆர்வலர்கள்

வழக்கமாக குழந்தை திருமணம் தொடர்பாக புகார்கள் சைல்ட் லைன் குறைவாக தான் வரும் என்றும், ஆனால் ஊரடங்கு சமயத்தில் 63 புகார்கள் குழந்தை திருமணம் தொடர்பாக வந்ததாகவும், கூறுகின்றனர் சைல்ட் லைன் அமைப்பினர். மேலும் குழந்தை திருமணங்களை தடுக்க சட்டங்கள் கடுமையானதாக இருந்த போதிலும் அதனை நடைமுறைபடுத்துவதில் உள்ள குளறுபடிகளே இது போன்ற குழந்தை திருமணங்கள் நடக்க காரணம் என்கின்றனர் இந்த அமைப்பினர்.

இது போன்ற குழந்தை திருமணங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க போதிய விழிப்புணர்வு மற்றும் கடுமையான சட்டங்களை நடைமுறைபடுத்தினால் மட்டுமே இனி வருங்காலங்களில் இதனை தேனி மாவட்டத்தில் முற்றிலுமாக ஒழிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பெற்றோர்கள் வாட்ஸ் ஆப் குழு தொடங்கியதால் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம்”: கோவை பி.எஸ்.பி.பி அடாவடி!