Tamilnadu

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்யும் - மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு கொடுமுடியில் 8 செ.மீ மழையும், கன்னியாகுமரி குழித்துறையில் 4 செ.மீ மழையும், சேலம் ஏற்காடு, கரூர் பஞ்சம்பட்டி, கன்னியாகுமரி சித்தார், கரூர் மயிலம்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 2 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவி இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை புயலாக வலுவடைந்து மேற்குக் கடற்கரையை ஒட்டி வடக்கு திசையில் நகரும். இதன் காரணமாக தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் லட்சத்தீவு கேரளா கடலோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ, அவ்வப்போது 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் கர்நாடகா கோவா கடலோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், இடையிடையே மணிக்கு 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் வரும் ஜூன் 4-ஆம் தேதி வரை மீனவர்களை பகுதிக்கு செல்ல வேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. அதிகபட்சமாக வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்சையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.