Tamilnadu

“முருகனையும், நளினியையும் உறவினர்களுடன் பேசவைப்பதில் அரசுக்கு என்ன பிரச்னை?” - சென்னை ஐகோர்ட் கேள்வி!

ஊரடங்கு சமயத்தில் மற்ற கைதிகளை அவர்களது உறவினர்களுடன் பேச சிறைத்துறையும், தமிழக அரசும் அனுமதித்திருந்த போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களுக்கு அனுமதியளிக்க தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது என எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த வழக்கில் இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமணியம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

மேலும் முருகனையும் லண்டனில் உள்ள தங்கையுடன் பேச அனுமதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, ஏற்கெனவே காலமான தனது தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் பார்க்க முருகனுக்கு தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் அதற்கு பதில் அளித்த நீதிபதிகள் வாட்ஸ்-அப் காலில் பேசுவதற்கு அனுமதிப்பதில் என்ன பிரச்னை உள்ளது என்று கேள்வி எழுப்பினர். நாளை மறுதினம் பதிலளியுங்கள்; அன்றைக்கே உத்தரவை பிறப்பிக்கிறோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: “மோடி அரசின் நான்கு கட்ட ஊரடங்கு மிகப்பெரிய தோல்வி” - ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு! #Lockdown