Tamilnadu

“கொலைகள் புரியத் தயங்காத அ.தி.மு.க” - பா.ஜ.க-வின் வளர்ப்பு பிள்ளையாக ஆளும் வெறியில் அராஜகம்!

கோமாளி அரசு.. அடிமை ஆட்சி.. என ஆரம்பத்தில் மக்களால் விமர்சிக்கப்பட்ட அதே கட்சிதான், பின்நாளில் ஸ்டெர்லைட் படுகொலை, நீட் அநீதிக் கொலை, பொள்ளாச்சி பாலியல் குற்றம், மீத்தேன் - ஹைட்ரோகார்பன் பசுமை வழிச்சாலை எனும் பெயரில் விவசாயநில அழிப்பு, ஒக்கி, கஜா புயல்களில் மீனவர்கள் மற்றும் விவசாயிகளை கைகழுவி விட்டது, கல்வி உரிமைகள் பறிப்பு, சொந்த குடிமக்களை அகதியாக்குவதற்கு முழு ஆதரவு, பேனர் படுகொலை என பல சம்பவங்களைத் தொடர்ந்து இன்று ஆளும் திமிரால் உயிருடன் ஜெயஸ்ரீ எனும் சிறுமி சாம்பலாக்கப்பட்ட கொடுமையும் அரங்கேறியிருக்கிறது.

பத்தாம் வகுப்பு படிக்கும் ஜெயஸ்ரீ எனும் சிறுமி, இரு ஆணவக்கார அ.தி.மு.க பிரமுகர்களால் உயிரோடு தீவைத்துச் சிதைக்கப்பட்டிருக்கிறார். ஆளுங்கட்சி எனும் அதிகார வெறியில் மனிதம் கொல்லும் இப்படுபாதகச் செயலை அவர்கள் புரிந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கொடூரச் செயல்களுக்கும் பின்னாலிருந்து தன்னுடைய பேராதரவை தந்து, அதிகாரம் இருந்தால் எத்தனை கீழ்த்தரமான மக்கள் விரோத காரியங்களைச் செய்தாலும் சுலபமாக சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிடலாம் என சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க.

அயோக்கியர்களை பாதுகாத்து, மிகச் சாதாரணமாக அப்பிரச்சனைகளை கைகழுவி விட்டு கடந்து செல்கிறது. இதுவரை இந்த எடப்பாடி அரசு செய்த அத்தனையும் தமிழக அரசியல் வரலாற்றில், இதுவரை எந்த ஆட்சியாளர்களும் செய்திடாத, செய்ய அஞ்சும் குற்றச் செயல்கள்.

மக்களின் எதிர்ப்பையும், எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களையும், சமூக செயற்பாட்டாளர்களின் எதிர்வாதங்களையும் சிறிதும் லட்சியம் செய்யாமல் இவற்றைச் செய்து வருகிறது.

திடீரென புறவாசல் வழியாக ஆட்சியைக் கைப்பற்றியவர்களுக்கு இது எப்படி சாத்தியமாகும்? அரியாசனத்தில் அமர்ந்துகொண்டு தன் சொந்த மக்களை நான்காம் தர அரசியல் லாபத்திற்காக புழு பூச்சிகளைப் போல நசுக்கும் ஆணவமும் துணிச்சலும் இவர்களுக்கு எப்படி வந்தது?

ஏனென்றால் இது பாசிச ஏகாதிபத்திய பா.ஜ.க-வின் வளர்ப்புப் பிள்ளை. அதிகார போதையில் தமிழகத்தின் மீது, தமிழக மக்கள் மீது தினந்தினம் நஞ்சைக் கக்கும் இராட்சத நச்சுப்பாம்புகளாய் வளர்ந்து நிற்கிறது. இவர்களைப் போன்றவர்களுக்கு இனி தெரியாமல் கூட தமிழக அரசியல் வரலாற்றில் நாம் இடமளித்துவிடக் கூடாது என நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

Also Read: “கொலைகார அ.தி.மு.க” - உண்மையை மூடி மறைக்க நினைக்கும் பா.ம.க, நா.த.க!