Tamilnadu

“எங்கள் கடையில் முஸ்லீம் ஊழியர்களே கிடையாது” : பேக்கரி விளம்பரத்தில் சர்ச்சை - உரிமையாளர் கைது!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சிறு - குறு தொழில் செய்து வந்த பலர் கடும் இன்னல்களை சந்தித்து வந்தன. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதரம் கருதி, அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த அரசு ஊரடங்கை தளர்த்த அனுமதி அளித்தது. அந்த வகையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு கட்டுப்பாடுகளுடன் தொழில்கள் செய்ய அனுமதிம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர், வாட்ஸ் அப் குரூப்பில் தனது கடை குறித்த விளம்பரத்தில் இஸ்லாமியர்களை அவதூறு செய்யும் விதத்தில் பதிவு செய்ததால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தி.நகர், மகாலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் அதே முகவரியில் ஜெயின் பேக்கரிஸ் & கன்ஃபெக்ஷனரீஸ் என்ற பெயரில் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். ஊரடங்கால் இந்த பேக்கரியில் தயாரிக்கும் பொருட்களை இணையதளம் வாயிலாக விற்பனை செய்து வருகிறார்.

இதற்காக பிரசாந்த் புதிதாக வாட்சப் குரூப் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் அடிக்கடி தனது பேக்கரி குறித்து விளம்பரத்தை பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் பிரசாந்த் வாட்சப் குரூப்பில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்.

அந்த விளம்பரத்தில், 'Made by Jains on Orders; No Muslim Staffs' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, எங்களின் பொருட்கள் அனைத்தும் ஜெயின் சமூகத்தினரால் உருவாக்கப்படும் பொருட்கள். எங்கள் கடையில் முஸ்லீம் ஊழியர்களே கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து விளம்பரத்தில் குறிப்பிட்ட மதத்தினரைப் பற்றி தவறாக குறிப்பிட்டுள்ளதாக வாட்ஸ் அப்பை பார்த்த பொதுமக்கள் இணையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில், மாம்பலம் போலிஸார் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் பிற மதம் பற்றி இழிவாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரசாந்த்தை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சர்ச்சைக்குரிய இந்த விளம்பரம் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

Also Read: “மதுபோதையில் பைக்கில் வேகமாக வந்த இளைஞர்கள்- தட்டிக்கேட்ட அண்ணன் கொலை; தம்பிக்கு வெட்டு”: அதிர்ச்சி தகவல்