Tamilnadu

அத்தியாவசிய பொருட்களுடன் வரும் வண்டிகளில் கறாராக பணம் பறிக்கும் சுங்கச்சாவடிகள் - வாகன ஓட்டிகள் புலம்பல்!

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், சுங்கச்சாவடிகள் செயல்பட அனுமதியளித்து, அத்தியாவசிய தேவைகளுக்காகச் செல்வோரை வதைத்து வருகிறது அரசு.

மக்களை துயருக்குள்ளாக்கும் பேரிடர் காலத்திலும் சுங்கச்சாவடிகளை திறக்க அனுமதித்ததோடு சில சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணமும் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.

மதுரையில் இருந்து மேலூருக்கு TATA Ace வாகனத்தில் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்லும் ஒருவர், சிட்டம்பட்டியில் உள்ள டோல்கேட்டை கடக்கும் ஒவ்வொரு முறையும் 85 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். அதுவே இருவழிப்பாதைக்கும் சேர்த்து முன்பே கட்டணம் செலுத்தினால், 130 ரூபாய் செலுத்தினால் போதும். இதன் மூலம் 40 ரூபாயை மிச்சப்படுத்த முடியும்.

ஆனால், ஃபாஸ்டேக் முறைக்கு மாறாத வாகனங்களிடம் இருவழிக் கட்டணம் வசூலிக்க முடியாது என்று இந்த ஊரடங்கிலும் கெடுபிடி காட்டுகிறார்கள் சுங்கச்சாவடி ஊழியர்கள். இதனால், ஒவ்வொரு முறையும் கூடுதலாக 40 ரூபாய் அதிகமாகிறது.

தமிழகத்தில் சுங்கச்சாவடி விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. 60 கி.மீட்டருக்கு ஒரு டோல்கேட் எனும் விதி கடைபிடிக்கப்படாமல் சட்டவிரோதமாக வாகன ஓட்டிகளிடம் பணம் பறிக்கப்படுகிறது.

சுங்கச்சாவடி கட்டணங்களால், அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு மக்களிடம் விற்கப்படுகின்றன. கொரோனா கொடுந்துயர் காலத்திலும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்வோர் கடும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.

Also Read: “ஊரடங்கு நீடித்தால் பல லட்சம் பேர் வறுமையில் சிக்குவார்கள்” - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் எச்சரிக்கை!