Tamilnadu

“ஊரடங்கில் மக்களுக்கு இலவச மருத்துவம்” : இளம் வயதிலும் சேவை செய்து நெகிழ வைக்கும் சிவகங்கை மருத்துவர்!

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கடுப்படுத்த அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், நோய் தொற்று அதிகம் இருக்கும் மாவட்டங்களில், முழு ஊரடங்கை முதல்வர் பழனிசாமி நேற்றை தினம் அறிவித்துள்ளர்.

இந்நிலையில், மக்களுக்குத் தேவையான பல்வேறு உதவிகளை அரசியல் கட்சியினரும், தொண்டு நிறுவனங்களும் மற்றும் தன்னார்வலர்களும் செய்து வருகின்றனர். அந்தவகையில் ஊரடங்கில் பணமில்லாமல் ஏழை எளிய மக்கள் சிரமம் அடைவதை உணர்ந்த மருத்துவர் ஒருவர், தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டம் கண்டனூரைச் சேர்ந்தவர் மருத்துவர் பூபதிராஜா. இவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிவந்த நிலையில், பின்னர் தனது சொந்த ஊரிலேயே கிளினிக் ஒன்றை ஆரம்பித்து 5 வருடகளாக நடத்தி வருகிறார்.

சொந்த ஊரில் கிளினிக் நடத்துவதலால் அந்த மாவட்டத்திலேயே குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்துவந்துள்ளார் மருத்துவர் பூபதிராஜா. சிறந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவர் என இவர் மாவட்டத்திலேயே பெயரெடுத்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சமூக இடைவெளியை கருதி தனது கிளினிக்கை மருத்துவர் பூபதிராஜா மூடியுள்ளார்.

இந்த நேரத்தில் பிற மருத்துவமனையில் அதிக கட்டணம் செலுத்தி சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும், தொலைத் தூரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் சென்று சிகிச்சை பெறமுடியாத சூழல் உள்ளால் தங்கள் கிளினிக்கை திறக்கும்படி ஊர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அவர்களின் கோரிக்கைக்குப் பிறகு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மீண்டும் கிளினிக்கை மருத்துவர் பூபதிராஜா திறந்துள்ளார். இந்த முறை சிகிச்சைக்குவரும் யாரிடமே பணம் பெற்றுக்கொள்ளாமல் சிகிச்சை அளிக்கமுடிவு செய்த மருத்துவர் பூபதிராஜா, தற்போதுவரை கட்டணம் வசூலிக்காமல் மக்களுக்கு சிகிச்சை அளித்துவருகிறார்.

சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து மருந்துகளை மட்டும் எழுதிக்கொடுத்துவருகிறார். மேலும் சிலருக்கு தனது சொந்த பணத்தில் மருந்தும் வாங்கிக் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, முககவசம் இல்லாத நோயாளிகளுக்கு தனது கிளினின் வாசலில் ஒரு பெட்டியில் முககவசம் வைத்து இலவசமாக வழங்கி வருகிறார்.

இவரிடம் தினம் கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றோர் என 50க்கும் மேற்பட்டோர் வந்த சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இப்படி கட்டணம் வசூலிக்காமல் சிகிச்சை அளிக்கும் மருத்துவரை மனமார பாராட்டிச் செல்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் மருத்துவரின் இந்த சேவைக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்துள்ளது.

Also Read: 10 நாட்களாக உணவின்றி தவித்த ஆட்டோ டிரைவர் குடும்பம்; உதவி வழங்கிய தி.மு.க இளைஞரணி!