நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய. மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.
ஆனாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் கொரோனா அச்சுறுத்தலால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உள்ளிட்டவையால் பெரும்பாலான மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் அவதி அடைக்கின்றனர்.
மக்களின் இந்த சூழலைப் புரிந்துக்கொண்டு தி.மு.க உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு உதவிகளை செய்துவருகின்றனர். குறிப்பாக தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் நிதியுதவி வழங்கியும் மருத்துவ உபகரணங்களுக்கும் நிதியையும் ஒதுக்கியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, 144 தடை உத்தரவினால் அன்றாட கூலி தொழிலாளி மக்கள் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் வீட்டினுள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவும் வகையில் தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உதவி தேவைப்படும்போது தொடர்புகொள்ள இளைஞர் அணியின் அவசர உதவி பெறும் செல்போன் எண் தொடர்பு கொள்ளலாம் என உதயநிதி ஸ்டாலின் முகநூலில் ’உங்களுக்கு உதவ தி.மு.க இளைஞரணி’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், சென்னை அன்பழகத்தில் அதற்கான பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏராளமான வடமாநிலத்தவர் தொடர்புகொண்டு உதவிகளை கேட்டுள்ளனர். இதனடிப்படையில் சென்னை மணலி சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மனைவி மஞ்சுளா தி.மு.க இளைஞரணி உதவி தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார். இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலின் திருவொற்றியூர் மேற்கு பகுதி இளைஞரணி அமைப்பாளர் மதன்குமாரை தொடர்புகொண்டு இவர்களுக்கு உதவ கோரிக்கை வைத்தார்.
உடனே மணலி சாஸ்திரி நகர் பகுதிக்கு சென்ற மதன்குமார், ஆட்டோ ஓட்ட முடியாமல் கடந்த 10 நாட்களாக அவதிப்பட்டு வரும் குடும்பத்தினருக்கு தேவையான அரிசி, கோதுமை, ரவை ,சமையல் எண்ணெய், பருப்பு, பால், பிஸ்கட், முட்டை உள்ளிட்ட மளிகைப் பொருட்களும் முக கவசங்களும் வழங்கியுள்ளார். இதனை அடுத்து உதவி பெற்ற ஆட்டோ ஓட்டுனரின் குடும்பத்தினர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.