Tamilnadu

“வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்”: எடப்பாடி அரசின் திட்டமில்லாத முழு ஊரடங்கால் தவிக்கும் தமிழக மக்கள்!

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்று சமூக அளவில் பரவிவிட்டால் கடுமையான உயிரிழப்புகளைச் சந்திக்க வேண்டும் என்பதால், தேசிய ஊரடங்கு இரண்டாவது கட்டமாக அறிவிக்கப்பட்டு தற்போது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது 23 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இதில் தமிழகத்தின் நிலைமையும் இதேதான்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் 6-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் முழு ஊரடங்கு அறிவிப்பால் மக்கள் கடைகளில் அலைமோதிவரும் அவலநிலை உருவாகியுள்ளது.

தமிழக அரசு ஊரடங்கை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் 26.04.2020 காலை 6 மணி முதல் 29.04.2020 இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது.

அதேப்போல், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 26.04.2020 முதல் 28.04.2020 இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. இதன்படி, காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். இந்த நாள்களில் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை. மேற்கண்ட பணிகளைத் தவிர, பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் நாளையில் இருந்து கடைகள் எதுவும் இருக்காததால், இன்று காலை முதலே மக்கள் காய்கறிகளை வாங்க வீதிகளில் குவிந்துள்ளனர். குறிப்பாக, சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், சேலம் ஆகிய 5 மாநகராட்சிகளிலும் கட்டுக்கடாத கூட்டம் வெளியே வலம் வரும் சம்பவம் நடந்துள்ளது.

இதற்கிடையில், இன்று ஒருநாள் மட்டும் கடைகளின் நேரத்தை மாலை வரை நீட்டிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “பல இடங்களுக்கு 26ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது.

நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து, மக்கள், தனிமனித விலகலுடன் பொருட்களை வாங்கிட உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

அதேப் பலரும் இதேக்கோரிக்கை வலியுறுத்திய பிறகு, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள 5 மாநகராட்சிகளில் இன்று மட்டும் பிற்பகல் 3 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் திறந்திருக்க அனுமதியை அம்மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.

ஆனாலும் அரசின் திட்டமிடல் அறிவிப்பு இல்லாததால், கொரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய மக்கள் கடைகளில் நெரிசலுக்கு உள்ளாகி கொரோனா பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு” - யாருக்கெல்லாம் விதிவிலக்கு? - தமிழக அரசு அறிவிப்பு! #Lockdown