Tamilnadu

“5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு” - யாருக்கெல்லாம் விதிவிலக்கு? - தமிழக அரசு அறிவிப்பு! #Lockdown

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 ஞாயிறு காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 புதன் இரவு 9 மணி வரையிலும் 4 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுபோல சேலம், திருப்பூர், மாநகராட்சிகளில் 26ம் தேதி ஞாயிறு காலை 6 மணி முதல் 28ம் தேதி செவ்வாய் இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப் பகுதிகளில் நோய்த் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிமாக உள்ளதால் ஊரடங்கை கடுமையாக்கினால் மட்டுமே நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் வல்லுனர் குழு எச்சரித்துள்ளதால் இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விதிவிலக்குகள் அளிக்கப்பட்ட துறைகள், அனுமதிக்கப்படும் அத்தியாவசியப் பணிகள் எவை என்பது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள சேவைகள் குறித்த அரசாணையை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

அதன்படி,

1. மருத்துவமனை, ஆய்வகங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், பால் விநியோகம், அமரர் ஊர்தி, மருத்துவம் சார்ந்த இதர சேவைகள் அனுமதிக்கப்படும்.

2. அத்தியாவசியச் செயல்பாடுள்ள துறைகளான தலைமைச் செயலகம், பொது சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, மின்சாரம், ஆவின், உள்ளூர் சேவைகள் மற்றும் குடிநீர் வாரியம் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

3) இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசியப் பணிகளுக்குத் தேவைப்படும் 33 சதவீதப் பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

4) அம்மா உணவகங்கள், ஏ.டி.எம் இயந்திரங்கள் வழக்கம்போல் செயல்படும்.

5) உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

6) முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.

7) ஆதரவற்றோருக்காக மாவட்ட நிர்வாகங்கள், சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் (Community Kitchens) தொடர்ந்து செயல்படும்.

8) ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.

9) கோயம்பேடு போன்ற மொத்த காய்கறிச் சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்படும். அதேபோல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும். மேற்கண்ட நாட்களில் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை.

10. பெட்ரோல், டீசல் பங்க்குகள் காலை 8 மணியிலிருந்து 12 மணி வரை மட்டும். எல்பிஜி கேஸ் ஏஜென்சிகள், ரேஷன் கடைகள், உணவுப் பாதுகாப்பு கழகக் கிடங்குகள், சிவில் சப்ளை மற்றும் போக்குவரத்து செயல்பட அனுமதி.

11. அச்சு மற்றும் காட்சி ஊடகம் செயல்பட அனுமதி.

மேற்கண்ட 11 வகைகள் தவிர வேறு எதற்கும் இந்தக் காலகட்டத்தில் அனுமதி இல்லை. மற்ற அரசுத் துறைகள் இயங்காது, ஐடி துறை ஊழியர்கள் வீட்டிலிருந்து இயங்க அனுமதி. மற்ற தனியார் நிறுவனங்கள் இயங்காது.

மேற்கண்ட விதிமுறைகள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாநகராட்சிகள் மட்டுமே, மற்ற இடங்களுக்கு வழக்கமான விதிமுறைகள் கட்டுப்பாடுகள் ஏற்கெனவே உள்ளவை தொடரும்.

இதை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனம் பறிமுதல் செய்வதோடு மட்டுமல்லாமல் கூடுதல் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விதிவிலக்குகள் அளிக்கப்பட்ட துறைகள், அனுமதிக்கப்படும் அத்தியாவசியப் பணிகள் எவை என்பது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Also Read: “ஊரடங்கு எனும் தாழ் போட்டு தொழிலாளர்களை எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்?” - ப.சிதம்பரம் வேதனை!