Tamilnadu

“கூத்துக் கலையே வாழ்க்கை” - மக்களை நெகிழச் செய்த மழவந்தாங்கல் ஆறுமுகத்தின் இறுதி ஆசை!

பிரபல கூத்துக் கலைஞர் மழவந்தாங்கல் (அரியலூர் மாவட்டம்) ஆறுமுகம் நேற்று முன்தினம் இயற்கை எய்தினார்.

அவர் இறக்கும் முன்பு, “நான் மக்களை மகிழ்விக்க எந்த வேடம் அணிந்தேனோ, அதே வேடத்தில் நான் இறந்த பின்பும் என் இறுதி ஊர்வலத்தில் கலைஞனாகவே செல்ல வேண்டும்” என கேட்டுக் கொண்டிருந்தாராம். அதேபோல அவர் இறுதிச் சடங்கில் அவர் எப்போதும் விரும்பி ஏற்ற வேடத்துடன் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.

செத்து மண்ணோடு போகும்போதும், போன பின்பும் கலைஞன் கலைஞனே...!

மனிதர்கள் வாழ வேண்டிய காலத்தில் மனதையும், புத்தியையும் கழற்றி எங்கேயோ மாட்டிவிட்டு பொண்ணுக்கும், பொருளுக்கும், ஆசை உறவுகளுக்கும், பொருளற்ற ஆசைகளுக்கும் அடிமையாகி சவங்களாய் அலைகிறார்கள். அதற்காக பல நேரங்களில் தனது அன்புக்குரியவர்களிடம் மனிதமற்று நடக்கவும் செய்கிறார்கள்.

ஒருபடி மேலே போய் சிலர் வெற்று கர்வங்களுகாக செருமிக்கொண்டு சக மனித உயிர்களின் உணர்வுகளை மதிக்காது, அவர்களை கொன்றுகுவித்து கூச்சமின்றி மார்தட்டிக்கொள்ளும் கும்பலும் உண்டு.

எதையெதையோ பெரிது என்றும், இவரிவர்தான் பெரியவர்கள் என்றும் தனக்குத்தானே விதிகளை உருவாக்கிக்கொண்டு தனக்குத்தானே பெருமை பிதற்றிக்கொண்டு ஒரு மூடர்கூட்டம் திரியும். அந்த வர்க்கத்துக்கெல்லாம் ஏதுமற்றவர்களை உயிருடன் கொலைசெய்ய குறைந்தபட்சம் காரணம் கூட இருக்காது.

இத்தனைக்கும் மத்தியிலும் மேற்சொன்ன அத்தனை மனிதர்களையும், சில மனிதர்கள் மட்டுமே ஒரு நொடியில் அந்த மனிதர்களையும்.. அவர்களின் அர்த்தமற்ற வாழ்வியல் முறையையும் அற்பமாக்கி காட்டுவார்கள்.

தன் கலையை கொண்டு எந்த உறவும் இல்லா மக்களை மகிழ்வித்து, அதையே தன் மகுடமாகத் தரித்து இராசவேடமிட்டு போகிறார் கிராமியக் கலைஞர் ஆறுமுகம்.

முக்கால்வாசி சனக்கூட்டம் மறந்துபோன.. மதிக்க நேரமில்லாத, அழிந்து வரும் இந்த கூத்துக்கலையைத் தன் உயிர் மூச்சாக வாழ்ந்த கலைஞன் தன் இறுதி ஊர்வலத்தில் உண்மையில் இராசாவாகப் போகிறார்.

Also Read: 'சிவாஜி' வெறும் பெயர் அல்ல, தமிழர்களின் கலை பெருமை! - பிறந்தநாள் தின சிறப்பு பகிர்வு!