Tamilnadu
'அமைச்சர் - எம்.எல்.ஏ கோஷ்டி மோதல்' : ஊரடங்கின்போது நடந்த இரட்டைக் கொலை - கடலூரில் பயங்கர சம்பவம்!
தமிழகத் தொழில்துறை அமைச்சர் ஏ.சி.சம்பத்துக்கும், பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரது ஆதரவாளர்களும் அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை சுண்ணாம்புக்கார வீதியைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் மணிகண்டன் (26). மரச் சிற்பம் செய்யும் தொழில் செய்துவரும் இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகனான பாலாஜி (22) ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதே பகுதியில் மணிகண்டனுக்குச் சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைக்கு, நேற்றிரவு 11.30 மணிக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்குச் சென்றிருக்கின்றனர். அப்போது அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் 10-க்கும் மேற்பட்டோர் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்று மணிகண்டன் மற்றும் பாலாஜி இருவரையும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது இருவரின் அலறல் சத்தம் கேட்டு அவர்களது உறவினர்களும் ஊர்மக்களும் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்மக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இந்த பயங்கரத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே பாலாஜி உயிரிழந்த நிலையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மணிகண்டனை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு அளித்த தீவிர சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டன் மற்றும் பாலாஜி ஆகியோரது உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், 20 பேரின் மீது வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்களும் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். அந்தச் சம்பவத்தில் இருதரப்பினரைச் சேர்ந்த 10 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் மணிகண்டனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் நடந்த இந்த இரட்டைக் கொலை தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை எடுத்துக் காட்டுகிறது. மேலும், கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளையடிப்பது தொடர்பாக இரு கோஷ்டிகளுக்கும் இடையே நடந்த மோதலில் இந்த கொலை நடந்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!