Tamilnadu

இதுதான் மருத்துவர்களுக்கு காட்டும் நன்றியா?: முகக்கவசம் கேட்ட மருத்துவர் இடமாற்றம்-எடப்பாடி அரசு அராஜகம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால், 10 பேர் உயிரிழந்துள்ளனர். 595 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு துறைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதில் பெரும் பங்கு வகித்துவரும் மருத்துவத்துறையினர் பல்வேறு சிரமங்களைக் கடந்து இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக, பல மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் கூடுதல் நேரம் பணியாற்றும் சூழலிக்கு மருத்துவர்கள் ஆளாகியுள்ளனர். இந்தநிலையில்தான் பல்வேறு பிரச்சனைக்களை எதிர்கொண்டு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கடந்த 21ம் தேதி ஊரடங்கு அன்று நாட்டு மக்களை கைதட்டச் செய்தார் பிரதமர் மோடி.

ஆனால், மோடியின் இந்த அறிவிப்பை பெரும்பாலான மருத்துவர்கள் பொருட்படுத்தவில்லை. அதற்குக் காரணம் நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை இதுவரை அரசாங்கம் வழங்கவில்லை என்பதாகும்.

அதனால், மருத்துவர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் வாங்கும் நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு அரசுக்கு கடிதம் எழுதிய மருத்துவரை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் சந்திரசேகர், கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவேண்டும் எனக் கோரி தமிழக அரசுக்கும், சுகாதாரத் துறைக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனால், அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்துள்ளது அ.தி.மு.க அரசு. அவருக்கு முன்பு அளிக்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்துள்ளது. மேலும், அவர் பணியாற்றி வந்த பதவியில் இருந்து மேலும் அவரை கீழிறக்கியுள்ளது.

இந்த நெருக்கடியான சூழலில் மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்பதை விட்டுவிட்டு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதிய மருத்துவர் சந்திரசேகரை பணியிட மாற்றம் செய்து இந்த அ.தி.மு.க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை சக மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, கடந்த பிப்ரவரி 20ம் தேதி பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது, அரசு செயலாளர் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

ஆனால் தற்போதுவரை அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஒரு உயிர்கொல்லி வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில், சிகிச்சை அளிக்கவேண்டிய மருத்துவர்களின் உயிர்களில் இந்த அரசுகள் கவனம் செலுத்தாமல் மெத்தனமாக செயல்படுவதை பலரும் கண்டித்துள்ளனர்.

மேலும், அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் என அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: “கொரோனா சிகிச்சை அளிப்பதால் வீட்டைக் காலி செய்ய சொல்கிறார்கள்”: மருத்துவ ஊழியர்களுக்கு நேர்ந்த அவலம்!