Tamilnadu

கலைஞர் செய்திகள் ஆவணப்படம் எதிரொலி : திருவாரூரில் தோண்டப்பட்ட ONGC குழி மூடப்பட்டது - விவசாயி மகிழ்ச்சி!

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு. இந்த அறிவிப்பு விவசாயப் பெருமக்களை ஏமாற்றும் பம்மாத்து வேலை என எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து வெளியிட்ட அரசிதழில், புதிதாக பெட்ரோலியம் மற்றும் ஹைட்ரோகார்பன் எடுக்கவோ, ஆய்வு செய்யவோ, எண்ணெய்க் கிணறு தோண்டவோ, அனுமதிக்கப்படாது. தடை செய்யப்பட்ட தொழில்களை அரசு விருப்பப்பட்டால் நீக்கவும் சேர்க்கவும் முடியும் என Schedule 2ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனில், அரசு நினைத்தால் புதிதாக ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியும். என்றால், புதிதாக எந்த நாசகார திட்டத்தையும் அனுமதிக்கமாட்டோம் எனச் சொல்லும் வாக்குறுதி உறுதித் தன்மையற்றது.

Also Read: எதற்கு இந்த ஏமாற்று வேலை? - எடப்பாடி அரசின் வேளாண் மண்டல அறிவிப்பும்... உண்மையும்!

அ.தி.மு.க அரசு சொல்வது போல, புதிதாக ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிக்கப்படாது என்றால், ஏற்கெனவே இருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்கள், செயல்பட்டு வரும் ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணறுகள் என்னவாகும் எனக் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இப்படி இருக்கையில், அ.தி.மு.க அரசு அறிவித்துள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை தொடர்ந்து கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி வேளாண் பொய் மண்டலம் என்ற ஆவணப்படத்தை எடுத்து ஒளிபரப்பியது. அதில், அரசின் திட்டங்களால், சாமானியர்களும், விவசாயப் பெருமக்களும் நித்தமும் எவ்வளவு பாதிப்பைs சந்திக்கிறார்கள் என்பது விரிவாகவும், தெளிவாகவும் விளக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்குப் பின்னர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயி ஒருவரின் வயலில் ONGC நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக குழி தோண்டியது தொடர்பாக கலைஞர் செய்திகளின் வேளாண் பொய் மண்டலம் ஆவணப்படத்தை பார்த்த அரசு அதிகாரிகள் அந்த விவசாயியின் வயலில் தோண்டப்பட்ட குழியை மூடியிருக்கிறார்கள். இதனால், அழகர் ராஜா என்ற அந்த விவசாயி மகிழ்ச்சியுடன் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.