Tamilnadu

“கைதட்டாம உட்கார்ந்து திண்ணுக்கிட்டு இருக்கீங்க”:அரசு விழாவில் பொதுமக்களை அசிங்கப்படுத்தி பேசிய அமைச்சர்!

புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திண்டுக்கல்லில் கடந்த மார்ச் 14ம் தேதியன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த அரசு விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்த விழாவில் கூடியிருந்த மக்களைத் தரக்குறைவாகப் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் சீனிவாசன் முதல்வர் மற்றும் துணை முதல்வரைப் புகழ்ந்து பேசும்போது, “கை தட்டாமல் உட்கார்ந்து திண்ணுக்கிட்டு இருக்கீங்க.. எல்லோருக்கும் வரும்” என பொதுமக்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியிருக்கிறார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்தப் பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மக்களை அவமதிப்பது போல தொடர்ந்து பேசிவரும் திண்டுக்கல் சீனிவாசன், சமீபத்தில் பழங்குடியின சிறுவன் ஒருவனை அழைத்து தனது செருப்பைப் கழற்றச் சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.

தற்போது, அரசு விழாவில் பங்கேற்ற மக்களை கைதட்டாமல் தின்றுகொண்டிருப்பதாக இழிவாகப் பேசியுள்ளார். தொடர்ந்து எளிய மக்களுக்கு எதிராக வன்மத்தோடு பேசிவரும் திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சர் பதவிலியிருந்து அகற்றவேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

Also Read: திண்டுக்கல் சீனிவாசன், சிறுவனை செருப்பு கழற்றவைத்த விவகாரம் : தமிழக அரசுக்கு பழங்குடி நல ஆணையம் நோட்டீஸ்!