Tamilnadu
விளைநிலத்தில் கழிவுகளை கொட்டிய லாரிகள் சிறைபிடிப்பு - மீண்டும் அள்ளச்செய்த விவசாயிகள்!
கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் இல்லாததால் நிலங்கள் யாவும் வறண்டு காய்ந்து போயுள்ளன. நொய்யலாற்றில் கலக்கப்பட்ட சாயக்கழிவுகளினால் பெருமளவு விவசாயம் பொய்த்து, நிலத்தடி நீர் முற்றிலும் பாழாகியுள்ளது.
இந்நிலையில், வறண்டு கிடக்கும் நிலத்தையும் விட்டுவைக்காமல், அருகில் இருக்கும் சாயப்பட்டறை தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் திடக்கழிவுகளை யாரும் இல்லாத நேரங்களில் மர்ம நபர்கள் கொட்டிச் சென்றுவிடுகின்றனர்.இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பெரும் அவதிக்குள்ளான கிராம மக்கள் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் தொழிற்சாலைக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அப்பகுதி விவசாயிகள் இதனை இப்படியே விட்டுவிட முடியாது என்றும் இதற்கு ஒரு முடிவுகட்டவேண்டும் என்றும் எண்ணியுள்ளனர்.
அதன்படி முதலில் திடக்கழிவுகளை யார் கொட்டிச்செல்வது என்று பார்ப்பதற்காக இரவு பகலாக மறைந்திருத்து கண்கானித்து வந்துள்ளனர். சில இடங்களில் சி.சி.டி.வி கேமராக்களையும் பொருத்தியுள்ளனர்.
இதனையடுத்து சில நாட்களுக்குள்ளாகவே திடக்கழிவுகளைக் கொட்டவந்த லாரியை சிறைபிடித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் லாரி எண்களை வந்து லாரி உரிமையாளர்களான செந்தில் மற்றும் ராஜமணிகண்டன் ஆகியோரை கண்டுபிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
பின்னர் அங்கு போலிஸார் நடத்திய விசாரணையில் ஈரோடு மாவட்டத்தில் பவானி பகுதியில் செயல்பட்டும் கவிதா டையிங் என்ற தொழிற்சாலையில் இருந்து அங்கு கழிவுகள் கொட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, விவசாயிகள் ஆலை மீதும் லாரி ஓட்டுநர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். விவசாயிகளின் இந்த கெடுபிடியால் அதிர்ந்துபோன லாரி ஓட்டுநர்கள் இனி அந்தத் தவறைச் செய்யமாட்டோம் என மன்னிப்புக் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து போலிஸார் முன்னிலையில் கொட்டிய கழிவுகளை மீண்டும் எடுத்துச் செல்வதாக ஒப்புக்கொண்டதையடுத்து அவர்களை விட்டுவிடும்படி விவசாயிகள் கூறியுள்ளனர். லாரி உரிமையாளர்கள் சொன்னதுபோல், அவர்கள் கொட்டிய கழிவுகளை அகற்றி மீண்டும் நிறுவனத்திற்கு கொண்டு செல்லும் வரை விவசாயிகள் உடன் இருந்தனர்.
மேலும், விரைவில் ஆலை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றுள்ளது.
Also Read
-
விமர்சனத்தைச் சகித்துக் கொள்வார்களா? ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறதா?: தவெக அரசுக்கு இந்து ராம் கேள்வி!
-
‘ஜனநாயகன்’ ரிலீஸ் புரமோஷனுக்காகத் தான் கர்நாடகா செல்லவே திட்டமிட்டாரா விஜய்? : முரசொலி தலையங்கம்!
-
“எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது!” : சட்டப்பேரவையில் மரிய வில்சன் சர்ச்சை பேச்சு!
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!