Tamilnadu

பள்ளிக்கு அருகே பெட்ரோல் பங்க் அமைக்க எதிர்ப்பு - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயின்ட் மெரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி கடந்த 1989ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளி அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே, ஹிந்துஸ்தான் பெட்ரொலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, மாவட்ட நிர்வாகத்திடம் பள்ளி நிர்வாகம் முறையிட்டபோது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பள்ளிக்கு அருகே பெட்ரோல் பங்க் அமைக்க தடைவிதிக்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அதில், பள்ளி, மருத்துவமனைகள் அருகில் பெட்ரோல் பங்குகள் அமைக்கக் கூடாது என விதி உள்ளது. இதை மீறி ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பெட்ரோலிய விற்பனை மையம் இருக்கும் இடங்களில் காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படும். அதுமட்டுமல்லாமல் பள்ளி குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறுகள், உடல் நலக் குறைவு ஏற்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு மத்திய பெட்ரோலிய அமைச்சகம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிர்வாகம் ஆகியோர் வழக்குத் தொடர்பாக பிப்ரவரி 27ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Also Read: “பணியிடங்களில் பாலியல் தொல்லை தடை சட்டத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது” - வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு!