Tamilnadu

‘பேருந்தின் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் பேசினால்...’ டிரைவர்களுக்கு திடீர் எச்சரிக்கை!

கோவை மண்டலத்துக்குட்பட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் மொத்தம் 2,700 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் மட்டும் டவுன் பஸ்கள், வெளி மாவட்டம், வெளி மாநிலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 1,190 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அரசுப் பேருந்துகள் விபத்தில் சிக்காமல் தடுக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளில் பகல் நேரங்களில் டிரைவர்கள் பெண்களை கண்டக்டர் இருக்கை மற்றும் பேனட்டில் அமர அனுமதிப்பதாலும், பெண்களுடன் பேசிக்கொண்டே செல்வதாலும் கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கோவை மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் பணியாற்றும் அரசுப் பேருந்து டிரைவர்கள் முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசக்கூடாது. மேலும் பேனட்டில் பெண்களை அமர வைக்கக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவையடுத்து அரசுப் பேருந்து டிரைவர்கள் தற்போது பெண்களை பேனட்டில் அமர அனுமதிப்பது இல்லை. மேலும் முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசுவதும் இல்லை.

Also Read: கவனக்குறைவால் விபத்து ஏற்படுத்துவோரின் லைசென்ஸை ஏன் ரத்து செய்ய கூடாது? நீதிமன்றம் கேள்வி

இது குறித்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகம் (இயக்குதல்) பொது மேலாளர் மகேந்திரகுமார் கூறியதாவது :

“அரசுப் பேருந்துகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க, டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு பேருந்துகளை மிதமான வேகத்தில் இயக்கவேண்டும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்; கவனக்குறைவாக வாகனங்களை இயக்கக்கூடாது உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறோம். இதுகுறித்து அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.

இந்த நிலையில் பெண்கள் பேனட் மற்றும் முன் இருக்கையில் அமரும்போது அவர்களிடம் சில டிரைவர்கள் பேசிக்கொண்டே செல்கின்றனர். அப்போது கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து கோவை மண்டலத்தில் உள்ள அரசுப் பேருந்து டிரைவர்கள் பேனட்டில் பெண்களை அமர வைக்கக்கூடாது.

முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை டிரைவர்கள் கடைபிடித்து பாதுகாப்பாகவும், முழு கவனத்துடனும் வாகனங்களை இயக்கவேண்டும். இதனால் கவனக்குறைவு காரணமாக ஏற்படும் விபத்துகள் முழுவதுமாக தடுக்கப்படும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவில் சமீபத்தில் டிரைவர் ஒருவர் பேருந்தை ஓட்டிச் செல்லும்போது அவர் அருகில் உட்கார்ந்திருந்த பெண்கள் கியர் போட்டு பஸ்சை இயக்கியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் கோவையில் முன்சீட்டில் அமரும் பெண் பயணிகளிடம் டிரைவர்கள் பேசக் கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.