Tamilnadu
“கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும் புதிய அறிவிப்பு”- TNPSC தேர்வாணையத்துக்கு பயிற்சி மையம் கடிதம்!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளை 2 நிலைகளாக நடத்துவது கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் தேர்வாணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட தேர்வுகளில் லஞ்சம் கொடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றது தொடர்பான புகார்கள் விஸ்வரூபமெடுத்து, பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றன.
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி போலிஸார் விசாரித்து வருகின்றனர். நியாயமான விசாரணை நடைபெற வேண்டுமெனில் சி.பி.ஐ விசாரணை நடைபெற வேண்டுமென தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், எதிர்வரும் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4, குரூப் 2ஏ ஆகிய தேர்வுகள் இனி முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இருநிலைகளை கொண்டதாக இருக்கும் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து வினாக்களுக்கும் விடையளிப்பது கட்டாயம் எனவும் பிற்பகல் நடைபெறும் தேர்வு 3 மணிக்கு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, விடைத்தாளில் கையொப்பத்திற்கு பதிலாக, தேர்வரின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குரூப் 4, குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளை இரண்டு நிலைகளாக நடத்துவதற்கு தேர்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் டி.என்.பி.எஸ்.சி தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், “டி.என்.பி.எஸ்.சி தேர்வை முறைகேடுகள் இன்றி நடத்த பல வழிகள் உள்ளன. 10ஆம் வகுப்பு கல்வித்தரத்தை அடிப்படையாகக் கொண்ட குரூப் 4 தேர்வில் 2 நிலைத் தேர்வுகள் தேவையில்லை. மாணவர்களின் நலன் கருதியே 27 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த முறை நீக்கப்பட்டது.
கிராமப்புற மாணவர்கள் தேர்வு பெற்று பணி பெறுதலை இந்த 2 நிலைத் தேர்வுகள் முறை தடுக்கும். சாமானிய மாணவர்களுக்கு அரசுப் பணி வாய்ப்பு எட்டாக்கனியாகும். புதிய சீர்திருத்தம் என்ற பெயரில் நேர்மையாக, கடின முயற்சி செய்து தேர்வு எழுதும் மாணவர்களை வதைக்கவேண்டாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!