
ஒன்றிய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3,284 கோடி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கான காரணங்கள் என்ன? என்றும்;
நிதிவிடுவிப்பு தாமதத்தால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஒன்றிய கல்வி அமைச்சகம் கருத்தில் கொண்டுள்ளதா என்றும் நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களிடம் கழக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவர் தயாநிதி மாறன் எம்.பி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:
சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3,284 கோடி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளதா? நிறுத்தி வைத்திருந்தால் அதற்கான காரணங்கள் என்ன?

சமக்ரா சிக்ஷா நிதி விடுவிப்பு என்பது தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 அல்லது ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தைச் செயல்படுத்துவதுடன் இணைக்கப்பட்டுள்ளதா? மேலும், ஒன்றிய அரசால் நிதியுதவி அளிக்கப்படும் ஒரு திட்டத்தின் மீது இத்தகைய நிபந்தனைகளை விதிப்பதற்கான சட்டப்பூர்வமான அடிப்படை உள்ளதா?
நிதி விடுவிப்பு தாமதத்தால் தமிழ்நாட்டில் ஆசிரியர்களின் ஊதியம், பள்ளி உள்கட்டமைப்பு வசதி, மாணவர் நலத் திட்டங்கள் மற்றும் கற்றல் விளைவுகள் ஆகியவற்றின் மீது ஏற்படும் பாதிப்பையும், தாக்கத்தையும் அமைச்சகம், மதிப்பீடு செய்துள்ளதா? அவ்வாறெனில், அதன் விவரங்கள் என்ன?
இதே போன்ற நிபந்தனைகள், மற்ற மாநிலங்கள் மீதும் விதிக்கப்பட்டிருந்தால், மாநில வாரியாக அதன் விவரங்கள் என்ன?
லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, மாநில அரசுடனான கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகளை பார்க்காமல், நிலுவையில் உள்ள நிதியை, ஒன்றிய அரசு எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்குமா? அவ்வாறெனில் ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?”








