Tamilnadu

கர்ப்பிணிகளுக்காக பிரத்யேக வசதியை ஏற்படுத்திய அரசு மருத்துவமனை : பொன்னேரி டாக்டருக்கு குவியும் பாராட்டு! 

பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகள் குழந்தை பிறப்பதை எண்ணி மன அழுத்தத்தில் இருப்பார்கள். பிரசவமாகும் சமயத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் வித்தியாசமான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாசிக்கும் திறனை வளர்க்கும் நோக்கில் கர்ப்பிணி பெண்களுக்கு என பிரசவ வார்டில் பிரத்யேகமாக நூலகம் ஒன்றை சொந்த செலவில் உருவாக்கியுள்ளார் மருத்துவர் அனுரத்னா.

அதில் குழந்தை பிறப்பு தொடர்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பயத்தை குறைக்கும் வகையிலான புத்தகங்களே பெரும்பாலும் இந்த நூலகத்தில் இடம்பெற்றிருக்கும். இதனை படிப்பதன் மூலம் பிரசவத்துக்கு பிரயத்தனமாகும் பெண்களும், குழந்தை பெற்ற பெண்களும் புத்துணர்வான மனநிலையை பெருகின்றனர் என மருத்துவர் அனுரத்னா கூறுகிறார்.

இந்த நூலகத்தை கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்லாது இதர சிகிச்சைகளுக்கு வருபவர்களும் புத்தகத்தை படித்து உடலுக்கு மட்டுமல்லாமல் அறிவுக்கும் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். மேலும், அந்த நூலகத்துக்கு முன்பு கீச்சிடும் குருவிக் கூடுகளையும் கட்டி, அரசு மருத்துவமனை என்றாலே மருந்து வாசம்தான் இருக்கும் என்ற பொதுபுத்தியையே மாற்றியமைத்திருக்கிறார் மருத்துவர் அனுரத்னா.

இந்த நூலகத்தை ஏற்படுத்திய மருத்துவர் அனுரத்னாவுக்கு மருத்துவமனைக்கு வரும் பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.