Tamilnadu
செங்கல்பட்டு டோல்கேட் தகராறின் போது 18 லட்சம் ரூபாய் மாயம் : திருடு போனது உண்மையா என போலிஸ் விசாரணை!
மோடி அரசு கொண்டு வந்துள்ள ஃபாஸ்டேக் முறை பொது மக்களை மட்டுமல்லாமல் அரசு ஊழியர்களிடத்திலும் பெரும் சங்கடத்தையும், இன்னல்களையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், கடந்த ஞாயிறு குடியரசு தினத்தன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை அடைந்த போது, சுங்கக் கட்டணம் கேட்ட ஊழியரிடம் பேருந்து ஓட்டுநர் நாராயணன் ஃபாஸ்டேக்கில் கட்டணம் செலுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
ஆனாலும், கட்டணம் செலுத்தும்படி சுங்கச்சாவடியில் இருந்த வடமாநில ஊழியர்கள் தகராறு செய்ததோடு ஓட்டுநரிடம் எல்லை மீறி பேசியதால் அங்கு மோதல் வெடித்துள்ளது. பேருந்தில் இருந்த பயணிகளும் ஓட்டுநருக்கு ஆதரவாக பேசி ஊழியர்களை கண்டித்துள்ளனர்.
இதற்கு பிறகு வாக்குவாதம் கைகலப்பாக முற்றியதால் பரனூர் சுங்கச்சாவடி அதகளமாகி சூறையாடப்பட்டது. இதில், சிசிடிவிக்கள், ஊழியர்களின் பைக்குகள் என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தகவலறிந்த செங்கல்பட்டு தாலுகா போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் விகாஸ் குப்தா, குல்தீப் சிங் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர் நாராயணன், நடத்துநர் பசும்பொன் ஆகியோரை கைது செய்தனர்.
சுங்கச்சாவடி முழுவதும் சேதமாகி இயல்பு நிலை திரும்பாததால் பரனூரில் கடந்த இரண்டு நாட்களாக வாகன ஓட்டிகளிடம் சுங்கக்கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாமல் இலவசமாக செல்கின்றனர்.
இந்நிலையில், மோதல் நடைபெற்ற பிறகு சுங்கச்சாவடியின் அலுவலகம் மற்றும் 12 சாவடிகளிலும் இருந்த ரூ18 லட்சம் மாயமாகியுள்ளது என சுங்கச்சாவடி பொறுப்பாளர் விஜயபாபு காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, சுங்கச்சாவடியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், டோல் வாங்கப்பட்ட கணக்குகள் கொண்டும் உண்மையாகவே பணம் திருடப்பட்டதா என்பதையும் விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
“அதிகரிக்கும் தவெக நிர்வாகிகளின் ‘க்ரைம் ரேட்’.. பகுதி பகுதியாய் பட்டியலிடும் முரசொலி தலையங்கம்!”
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!