Tamilnadu

2வது மனைவிக்கு கணவரின் ஓய்வூதியத்தை பெறும் உரிமை உண்டா? - என்ன சொல்கிறது உயர் நீதிமன்றம்!

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் பஞ்சாயத்து யூனியனில் கிராம மருத்துவராக பணியாற்றியவர் சின்னச்சாமி. இவருக்கும் பஞ்சோலை என்பவருக்கும் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் பிறந்தன.

சின்னச்சாமி சரோஜினிதேவி என்பவரை 2வதாக திருமணம் செய்தார். அவருக்கு 2 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், கடந்த 1997ல் பஞ்சோலை காலமானார். சின்னச்சாமி கடந்த 1999ல் மருத்துவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, தனது குடும்ப ஓய்வூதியத்திற்கு வாரிசாக 2வது மனைவி சரோஜினிதேவியை நியமித்தார். கடந்த 2009 ஜனவரி 20ல் மருத்துவர் சின்னச்சாமி மரணமடைந்ததை அடுத்து, தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக்கோரி சரோஜினிதேவி, உள்ளாட்சி நிதித்துறையிடம் மனு கொடுத்துள்ளார்.

அரசு ஊழியர்களாக இருந்தால் 2வது மனைவி ஓய்வூதிய பலன்களைப்பெற ஓய்வூதிய விதிகளில் இடமில்லை எனக்கூறி அந்த மனுவை நிராகரித்துள்ளனர். இதையடுத்து, தனக்கு கணவரின் குடும்ப ஓய்வூதியத்தை வழங்குமாறு உத்தரவிடக்கோரி சரோஜினிதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சின்னச்சாமியின் முதல் மனைவி இறந்துவிட்டதாலும், 34 ஆண்டுகள் மனுதாரரும், சின்னசாமியும் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்ததால், அவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

முதல் மனைவி விவாகரத்து வாங்கினாலோ அல்லது இறந்துவிட்டாலோ நீண்டநாட்கள் கணவருடன் வாழ்க்கை நடத்தும் 2வது மனைவிக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, 2009 ஜனவரி 20 முதல் இதுவரை கணக்கிட்டு, மனுதாரருக்கு 12 வாரங்களில் வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Also Read: மணமான பெண் காலமானால் அவரது தாய் வாரிசாக முடியுமா? - உயர்நீதிமன்றம் விளக்கம்!