Tamilnadu

2 மையங்களில் தேர்வு எழுதியவர்கள் டாப் 100 பட்டியலில் வந்தது எப்படி?- முறைகேடு புகார் பற்றி TNPSC விசாரணை!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 9,300 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 575 மையங்களில் நடந்தது.

இந்த தேர்வு முடிவை நவம்பர் மாதம் 12ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டது. தேர்வாணையம் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் மொத்த தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றவர்களில் 40 பேர் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் எழுதியிருப்பவர்களாக உள்ளனர் என்று தேர்வர்கள் பரபரப்பு குற்றஞ்சாட்டை முன்வைத்தனர். அதுமட்டுமில்லாமல், அந்த 40 பேர்தான் இடஒதுக்கீடு தரவரிசை பட்டியலிலும், மாநில அளவில் முதல் 5 இடங்களைப் பெற்றவர்களின் பட்டியலிலும் இருக்கின்றனர் என்றும் புகார் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் 5,575 தேர்வு மையங்களில் நடந்த தேர்வுகளில் 2 தேர்வு மையங்களில் எழுதியவர்கள் மட்டும் தரவரிசை பட்டியலில் அடுத்தடுத்து நல்ல மதிப்பெண் பெற்றது எப்படி என்ற கேள்வி எழுந்தது. தரவரிசை பட்டியலில் 100 இடங்களுக்குள் 40 இடங்களில் இடம்பெற்றவர்களில் பலர் வெவ்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களைப் புறக்கணித்து ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களை தேர்வு செய்ததற்கான காரணம் என்ன என்பது பற்றி சந்தேகம் ஏற்படுவதாக தேர்வர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், முறைகேடு புகார்கள் குறித்து டி.என்.பி. எஸ்.சி விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு :

“தமிழ்நாடு அரசுப்பணியளர் தேர்வாணையத்தின் ஒளிவு மறைவற்ற நேர்மையான நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் செயல்படும் நபர்கள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கையுடன் இருக்குமாறு தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அண்மையில் நடந்து முடிந்த க்ரூப் 4 தேர்வில் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய இதர மாவட்டங்களைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகப்படியான எண்ணிக்கையில் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

1. இராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வட்டங்களில் 128 தேர்வு மையங்களில் 32879 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதிலிருந்து 497 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2. அவர்களில் பலரும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்தவர்கள் ஆவர்.

3. மேற்கூறிய விண்ணப்பதாரர்கள் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையைச் சேர்ந்த வெவ்வேறு மையங்களில் வெவ்வேறு அறைகளில் தேர்வு எழுதியுள்ளனர். எனவே பல்வேறு செய்திகளில் தெரிவித்துள்ளது போல் இந்த 57 நபர்களும் ஒரே அறையிலிருந்தோ அல்லது ஒரே தேர்வுக்கூடத்திலிருந்தோ தெரிவு செய்யப்படவில்லை.

4. மேலும் இந்த மையங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களில் ஒட்டுமொத்த தரவரிசை அடிப்படையில் முதல் 1000 இடங்களில் 40 நபர்களும், முதல் 100 இடங்களில் 35 நபர்களும் உள்ளனர்.

5. இந்த குற்றச்சாட்டு குறித்து மேற்கூறிய விண்ணப்பதாரர்களின் விடைத்தாள்கள், ஆவணங்கள் மட்டுமின்றி இத்தேர்வுடன் தொடர்புடைய பிற ஆவணங்கள் அனைத்தும் மிகுந்த கவனமுடன் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து எவ்வித பாரபட்சமுமின்றி மேலும் விசாரணை செய்யப்பட்டு விரைவில் உண்மை நிலை அறிவிக்கப்படும். இவ்விசாரணையில் தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் அதற்குக் காரணமான நபர்கள் மீது சட்டப்படி மிகக்கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும். எனவே தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை கொண்டு அமைதி காக்குமாறு தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: குரூப் 4 தேர்வில் தவறான கேள்விகள்... எப்போதுதான் தவறுகளைத் திருத்திக்கொள்ளும் டிஎன்பிஎஸ்சி?