Tamilnadu

“மக்களை ஏமாற்றும் ஆளுநர் உரை” : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம்!

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று துவங்கியது. அவை தொடங்கியதும் ஆளுநர் உரையைப் புறக்கணித்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பான விவரங்களை ஆளுநர் உரையின்போது பன்வாரிலால் தெரிவித்தார்.

இந்த ஆளுநர் உரையில் தமிழக மக்களின் நலன்கள் குறித்து எந்த அம்சமும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்த்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தமிழக ஆளுநரால் ஆற்றப்பட்ட உரை, தமிழக மக்களின் அதிகரித்து வரும் அன்றாடப் பிரச்னைகளுக்கு எவ்வித நிவாரணமும் அளிக்காமல் பெருத்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது.

மத்திய அரசிடம் இருந்து வழங்கப்படும் நிதியளவு குறைந்துள்ளது என்று ஆளுநர் தனது உரையில் ஆதங்கப்பட்டிருந்தாலும், மாநிலத்திற்கு வர வேண்டிய தொகையினை கேட்டுப்பெற வலுவான குரல் எழுப்புவதற்கு தமிழக அரசு மறுத்து வருவது கண்டனத்திற்குரியது.

மத்திய அரசு தமிழக அரசுக்குத் தரவேண்டிய மானியத் தொகையும் தொடர்ந்து குறைந்து வருவதும், தமிழக அரசு மென்மையான குரலில் மானிய நிதியை வழங்குமாறு கோருவதும் மாநில நலனைப் புறக்கணிப்பதாக உள்ளது.

அதேபோல் தமிழகத்திற்குத் தரவேண்டிய சேவை வரியில் 50 சதவிகிதத்திற்கு பதிலாக 42 சதவிகிதம் மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது.

தமிழகம் முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முறையான அனுமதி பெற்று இப்போராட்டங்களை நடத்த முயன்ற போதிலும் காவல்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்து, போராடுபவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு அலைக்கழித்து வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆளும் பா.ஜ.க உள்ளிட்ட ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள் போராடும்போது மட்டும் காவல்துறை அனுமதி வழங்குவது என்பது இந்த அரசின் பாரபட்சமான போக்கினை வெளிப்படுத்துகிறது.

ஆளுநர் அறிக்கையில் 'தமிழக மக்கள் எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும் அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்கிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: #LIVE : தொடங்கியது தமிழக சட்டப்பேரவை : ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க - காங்கிரஸ் வெளிநடப்பு!

ஆனால், மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் மதரீதியான பாரபட்சமான குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கட்தொகை பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகிய விஷயங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து விட்டு, அனைவரின் நலன்களைப் பாதுகாக்கப்போவதாக கூறுவது மக்களை ஏமாற்றுவதாக உள்ளது. மத்திய அரசின் மேற்கண்ட சட்டங்களுக்கு மாநில அரசு தனது ஆதரவினை வாபஸ் பெற வேண்டும்.

தமிழக விவசாயிகள் நெடுங்காலமாகப் போராடிவரும் விளைபொருட்களுக்கு நியாயமான விலை, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இந்த ஆளுநர் உரையில் எவ்வித அறிவிப்பும் இல்லாதது தமிழக அரசின் விவசாயிகளைப் பற்றிய கவலையற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், சிறு, குறு தொழில்கள் பல்லாயிரக்கணக்கில் மூடப்பட்டுள்ள நிலை ஆகியவற்றில் மாநில அரசு உடனடி கவனம் செலுத்திட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.