Tamilnadu

கோட்டை கொத்தளத்துக்கு அருகே கழிவறையா? - தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

சென்னையின் மிகவும் பழமையான கோட்டை கொத்தளத்தின் கீழ்ப்புறத்தில் கழிவறை அமைக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமை செயலகத்தில் நடத்தப்பட்டு வரும் இந்த அத்துமீறலை உடனடியாகத் தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தமிழக அரசின் தலைமைச் செயலகம், சட்டமன்றப் பேரவை வளாகம் ஆகியவை சென்னை மெரினா கடற்கரை ராஜாஜி சாலையில் அமைந்துள்ளன. இந்த கோட்டை பகுதியில் மிக முக்கிய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்குவது கோட்டை கொத்தளமாகும். இந்த கோட்டை கொத்தளத்தில் 138 அடி உயரத்துக்கு கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு அதில் தினமும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு வருகிறது. கோட்டையின் வாயிலுக்குள் நுழைந்தவுடன் வலது புறத்தில் 138 அடி உயர கொடிக்கம்பம் இருப்பதைப் பார்க்கலாம்.

கி.பி 1687-ல் அமைக்கப்பட்ட இந்த கொடிமரத்தில் தான் இன்று வரை தேசியக் கொடி ஏற்றப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தின் போது கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் உரையாற்றுவது வழக்கம். இதற்கான அனுமதியை பெற்றுக் கொடுத்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

300 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமிக்க மிகப் பழமையானதாகத் திகழும் கோட்டை கொத்தளத்தின் கீழ்ப்புறத்தில் தற்போது வாகனங்கள் நிறுத்துதற்கான வசதிகள் உள்ளன. அதில் பேரவைத்தலைவர், துணை முதல்வர், மூத்த அமைச்சர்களின் வாகனங்கள் நிறுத்திவந்த நிலையில் தற்போது இந்த இடம் காவல்துறை அதிகாரிகளின் உத்தரவால் இடிக்கப்பட்டு கழிவறைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டை கொத்தளப் பகுதியையே அவமதிக்கும் வகையில் தேசியக்கொடி ஏற்றும் இடம் அமைந்துள்ள பகுதியில் கழிவறை, குளியலறை, போன்றவை அமைக்கப்பட்டு வருவது என்பது பாரம்பரிய சின்னத்தையும், தேசியக் கோடியையும் அவமதிக்கும். இந்தச் செயலை தமிழக அரசு நிறுத்திக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் காவலர்களுக்கு ஏற்கெனவே கழிவறை வசதிகள் இருந்து வரும் நிலையில் காவல்துறை உயரதிகாரிகள் தங்களின் தனிப்பட்ட வசதிக்காக கோட்டை கொத்தளப்பகுதியை அவமதித்து கழிவறையைக் கட்டி தலைமைச் செயலகத்தின் பாரம்பரியத்தையும் அதன் புனித்தன்மையையும் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவே பார்க்கப்படுகிறது.

Also Read: "விண்ணுக்குச் செல்ல 4 இந்தியர்கள் தேர்வு” - இஸ்ரோ சிவன் தகவல்!