Tamilnadu

தி.மு.க தலைமையிலான பேரணியில் CITU சங்கம் பங்கேற்கும் : அரசின் எதிர்ப்பை மீறி களம் காணும் ஊழியர்கள்

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாமல் போன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, தற்போது பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23ம் தேதி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணி சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து புறப்படும் பேரணி புறப்பட்டு, புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் முடிவடைகிறது. அங்கு தலைவர்கள் கண்டன உரையாற்றுகின்றனர்.

இந்தப் பேரணியில் அனைத்து அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர், நடிகர் சங்கம், தொழிற்சங்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.

இதனால், நாளை தி.மு.க தலைமையில் நடைபெறவுள்ள பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மாநகர போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், “மாநகர் போக்குவரத்துக் கழகம் போக்குவரத்து சேவையை முழுவதுமாக பொறுப்பெற்று நடத்தும் நிறுவனம் என்பதனால், தொழிலாளர்கள் அனைவரும் வருகின்ற 23.12.2019 அன்று வழக்கம் போல் பணிக்கு தவறாமல் ஆஜராக வேண்டும்.

23.12.2019 அன்று வழங்கப்பட்ட விடுப்புகள் யாவும் இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது மற்றும் வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு ஆஜராக வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தின் இந்த அறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: LIVE #CAA : கொதிக்கும் இந்தியா - பதுங்கும் பா.ஜ.க : நாளை தமிழகத்தில் மாபெரும் பேரணி !

இதுகுறித்து CITU மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தி.மு.க தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் நிச்சயம் பங்கேற்பார்கள்.

நாளை நடைபெறும் பேரணியை பலவீணப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கையை மேற்கொள்கிறது. அதேபோல் மாநகர போக்குவரத்து போன்ற அரசு நிறுவனங்கள் விடுமுறை கிடையாது. விடுமுறை அளித்திருந்தாலும் அதுவும் ரத்து செய்யவதாக தெரிவித்துள்ளது.

அரசின் இத்தகைய நடவடிக்கையை தொழிற்சங்கம் நிராகரிக்கிறது. எனவே அரசின் அறிவிப்புகள் மீறி நாளை நடைபெறும் பேரணி மிக வெற்றிகரமாக நடக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.