Tamilnadu

மோடி உருவபொம்மை எரிப்பு - எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய மத்திய பா.ஜ.க அரசு மற்றும் மசோதாவை ஆதரித்த அ.தி.மு.க அரசைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றக் காரணமாக இருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை முற்றுகையிடப் போவதாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக பட்டினம்பாக்கம் பேருந்து டெப்போ அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடினர். அங்கிருந்து பேரணியாகச் சென்று கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டை முற்றுகையிடத் திட்டமிட்டிருந்தனர். இந்தப் பேரணியை மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்தப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததோடு பேரணி தொடங்கியவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, போராட்டக்காரர்கள் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தும், பா.ஜ.க தலைவர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் படங்களை எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

போராட்டத்தின் போது பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, “நாட்டை மத ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தாக்கும் நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க, சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு பச்சை துரோகம் செய்துள்ளது” எனக் குற்றம் சாட்டினார்.

Also Read: #CAA ’டிசம்பர் 23 தமிழகத்தின் எதிர்ப்பைக் காட்ட ஒன்றிணைவோம்’ - மு.க ஸ்டாலின்