Tamilnadu

ஏலம் விடப்பட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி - கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு!

அ.தி.மு.க அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் மூன்றாண்டுகளுக்கும் மேலாக காலம் தாழ்த்தி வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தால், வார்டு வரையறை, இடஒதுக்கீடு, சுழற்சி முறை ஆகியவற்றை முறையாக கடைபிடிக்காமல் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவி ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தவிர்ப்பதற்காக திட்டமிட்டு அ.தி.மு.க ஆரசு குழப்பங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், அ.தி.மு.க பிரமுகர்கள் ஜனநாயக விரோதமாக பதவிகளைப் பெற முயற்சித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி 50 லட்சம் ரூபாய்க்கும், துணைத் தலைவர் பதவி 15 லட்சம் ஏலம் விடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவரும், அ.தி.மு.க பிரமுகருமான சக்திவேல், துணை தலைவர் பதவிக்கு தே.மு.தி.க பிரமுகர் முருகன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஏல தொகை வரும் ஞாயிறு 15ம் தேதி செலுத்தப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

Also Read: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததை எதிர்த்து தி.மு.க வழக்கு - நாளை மறுநாள் விசாரணை?

ஜனநாயக ரீதியாக தலைவர், துணைத் தலைவர் பதவிகளை மக்கள் வாக்களித்து தேர்வு செய்யாமல் பணம் கொடுத்து பதவியை ஏலம் எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏலம் மூலம் பதவியைப் பெற முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனநாயக அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.